Tuesday, February 8, 2011
சூனிய சம்பாஷணை--கூறையுஞ்சோறும்.....
காறையும் நாணும் வளையலுங் கண்டவர்
பாறையி லுற்ற பறக்கின்ற சீலைபோல்
ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே.----மந்திரம்.2893.
ஆடையும்,சோற்றினால் ஆய உடல் வனப்பும் ,குழலில் வைத்த எண்ணெயும், கழுத்தில் அணியும் காறையும், இடை நாணும்,கை வளையலுமாகியவற்றை அணிந்த பெண்ணைக் கண்டு மோகம் கொண்டவர்,பாறை மீது வைத்த ஆடை பறந்து அழுக்குக் குழியில் விழுவது போல்,காமம்,குரோதம்,லோபம்,மோகம், மதம்,மாற்சரியம் ஆகிய ஆறு உட்பகைகளால் கெடுவர்.
இங்கு ‘பாறையிலுற்ற பறக்கின்ற சீலை போல்’என்பதற்கு,பாறை மீது வைத்த ஆடை பறப்பது” என்று பொருள் கொள்ளப் படுகிறது.ஆனால்,இவ்வாறு அழகு படுத்தப் பட்ட பெண்,ஒரு கற்பாறைக்குப் புடவை சுற்றியது போல் இருக்கிறாள்;எவ்வாறு புடவை சுற்றிய கற்பாறை எந்த இன்பமும் கொடுக்காதோ,அதே போல் அந்தப் பெண்ணும் ஆன்மாவுக்கு இன்பம் தர மாட்டாள்,என்று மற்றொரு பொருளும் சொல்லப் படுகிறது.
ஆனால் சூனிய சம்பாஷணை என்ற தலைப்பில்,குறியீட்டு மொழி இல்லாமல் ஒரு பொருளைப் பற்றித் திருமூலர் சொல்வாரா?எனவே வேறு விதமாக யோசித்தால் தோன்றுவது---
கூறை எனபது,உடலைப் போர்த்திய தோல்.
சோறு என்பது சதை.(கத்தாழைக்குள் சோறு இருப்பது போல்)-
குழாயகத்தெண்ணை என்பது எலும்பு நரம்புகள்,குருதி-குழாய்-எலும்பு,நரம்பு;எண்ணெய்-குருதி
காறை,நாண் வளையல்-கழுத்து,இடை,கை போன்ற உடல் உறுப்புகள்.
மொத்தமாகக் குறிக்கப்படுவது.அழியும் இந்த உடல்.
இந்த உடலின் மேல் விசேட கவனம் செலுத்திப் போற்றிப் பாதுகாத்து, உடலில் உள்ள புலன்களின் மயக்கத்தால்,இந்த உடலிலுறை ஆன்மாவை மறப்பவர்கள், மீண்டும் பிறவிக் குழியில் வீழ்வர்!(ஆறைக்குழி என்பது பிறவிக் குழியைக் குறிக்கும் எனக் கொள்ளலாம்.) இது எனக்குத் தோன்றிய பொருள்.
திருக்குறளில் ’எச்சத்தால்’ என்பதை ‘மக்களால் என்று மாற்றிய பாதிரியார் போல் என் கருத்துத் தவறாகக் கூட இருக்கலாம்.ஆனால் சித்தர்களின் குறியீட்டு மொழியின் பொருளுக்கு எல்லை ஏது?
திருமூலர் என்ன நினைத்தாரோ!
Tuesday, February 1, 2011
சூனிய சம்பாஷணை-வழுதலை வித்திட...
என்று ஒரு பகுதி உள்ளது.இதில் மொத்தம் எழுபது பாடல்கள் (மந்திரங்கள்) உள்ளன. எளிதில் பொருள் விளங்காத குறியீட்டு மொழியில் இப்பாடல்கள் அமைந்துள்ளன. இம்மந்திரங்களின் கருத்து இதுதான் என்று வரையறுக்கமுடியாதபடி அவை அவரவர் அனுபவத்துக்குத் தக்க வெவ்வேறு பொருள்களைக் கொண்டுள்ளன. சூனியம் என்பது ஒன்றும் இல்லாதது.இங்கு இதுதான் பொருள் என்று வரையறுக்க முடியாத நிலையைக் குறிக்கிறது.சித்தர்களின் குறியீட்டு மொழி புரிவது கடினம்.இங்கு நான் புரிந்துகொண்டு எழுதுகிறேன் என்று சொன்னால் அது பொய்.அந்த அளவுக்குப் பக்குவமும் ஞானமும் எனக்கில்லை.பல உரைகளில் படித்ததை அடிப்படையாகக் கொண்டே இதை எழுதுகிறேன். இதைப் படிக்கும் உங்களுக்குப் புதிய கருத்துக்கள் தோன்றலாம்.வேறு சில விளக்கங்கள் படித்திருக்கலாம்.அவ்வாறெனில் தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
இங்கு நான் சில பாடல்களை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளேன்.ஒரு சிறிய முயற்சி.
மந்திரம்.2868.
”வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது
தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே.”
இதை அப்படியே பொருள் கொண்டால்” தோட்டத்தில் புழுதியைத் தோண்டினேன்.அக்குழியில் கத்தரிக்காய்(வழுதல்) விதை விதைத்தேன்.அதிலிருந்து பாகற்கொடி படர்ந்தது.அதில் பூசணி பூத்தது.அதைக் கண்ட,அங்கிருந்த தோட்டக் குடிகளெல்லாம் பயந்து,தம் சிறு தெய்வங்களைத் தொழுது கொண்டு ஓடினார்கள்.அதன் பின் அக்கொடியில் வாழைக்கனி முற்றிலுமாகப் பழுத்தது”
நேரடியாகப் பார்த்தால் பொருளற்ற ஒரு பாடல்.ஆனால் அறிஞர்கள் இதன் கருத்தை அனுபவ பூர்வமாக விளக்கும்போது வியப்பாக இருக்கிறது. நடக்கமுடியாத ஒரு நிகழ்ச்சி மூலம் தத்துவங்கள் விளக்கப் படுகின்றன..
இங்கு தோட்டம் என்பது நமது உணர்வாகிய நெஞ்சக் கமலம். புழுதியைத் தோண்டுதலாவது,அவ்வுணர்வுகளைப் பயந்து வரும் தத்துவங்களின் இயல்பை ஆராய்ந்து காணுதல்.வழுதலை வித்திடல் என்பது ஐந்தெழுத்தை உள் ஊன்றி நிறுத்துதல்.பாகல் என்பது நிலையில்லாப் பொருள்களில் பற்றற்று இருத்தல்.பூசனி பூத்தது என்பது திருவருள் விளக்கம்.தோட்டக் குடிகள் என்பது நம் அஞ்ஞானம்.வாழை பழுத்தது என்பது இறை அருட்பேறு.
இதையே வேறு முறையில் காணும்போது இவ்வாறு கொள்ளப் படுகிறது...... வழுதலை வித்திடல்-குண்டலினி யோகப் பயிற்சி;பாகல் முளைத்தது-வைராக்கியம் கிடைத்தது;புழுதியைத் தோண்டினேன்-ஆன்மா பற்றிய தத்துவ விசாரம்;பூசனி பூத்தது-சிவ தத்துவத்தைத் தெரிந்து கொள்ளல்;தோட்டக் குடிகள் ஓடினர்-புலனுணர்வுகள் அகலுதல்;பழுத்தது வாழைக்கனி--சிவானுபவம் கிட்டல்.
குண்டலினி யோகமாவது,மூலாதரத்தில் உறங்கும் சக்தியை மேலேற்றி சஹஸ்ராரத்தை அடையச் செய்தல்......சிற்றின்பத்தில் செலவிடும் சுக்கிலத்தை மூலக்கனல் ஆக்கிப் புருவ மத்தியாகிய ஆக்ஞைக்கு ஏற்ற,அங்கு தோன்றும் அருட்சக்தி அருளால், தத்துவப் பிணிப்பு நீங்கி உணர்வுகள் தூய்மை அடைந்து, சஹஸ்ராரம் அடைகிறது.சீவ கரணங்கள்,சிவ கரணங்களாகி சிவானுபவம் விளைகிறது.
வேறு விதமாகச் சொன்னால்...வழுதல் என்பது துறவையும்,பாகல் என்பது உலக மறுப்பையும்,பூசனி என்பது சிவபெருமானையும், தோட்டக் குடிகள் என்பது,ஐம்புலன்களையும்,மும்மலங்களையும்,வாழை பழுத்தல் என்பது முத்தியையும் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்படுகிறது.
சித்தர்களின் கருத்தை யாரால் அறிந்து கொள்ள முடியும்?
Saturday, December 11, 2010
பதிவுத் திருட்டு!
என் பதிவு அவருக்கு மிகவும் பிடித்திருக்க வேண்டும்.அதில் சொல்லப்பட்ட கருத்து அதிகம் பேரைச் சென்று அடைய வேண்டும் என்று அவர் எண்ணியிருக்கலாம்.எனவே அதைத் தம் பதிப்பில் வெளியிடுவதன் மூலம் மேலும் பலர் பயன் பெறட்டும் என்று நல்லெண்ணத்தில் செயல் பட்டிருக்கலாம்.அவருக்கு நன்றி.
ஆனால் ஒரே ஒரு வருத்தம்!அப்பதிவுகளின் கடைசியில்,”மதுரை சொக்கனின் நமக்குத் தொழில் பேச்சு பதிவிலிருந்து” என்று ஒரு வரி சேர்த்திருக்கலாம்.தவறி விட்டார்.மறந்திருக்கலாம்.
நடந்தவை நடந்தவையாய் இருக்கட்டும்;இனி நடப்பவை நல்லவையாய் இருக்கட்டும்.
Friday, August 7, 2009
அம்மாவை வணங்காது உயர்வில்லயே !
ஸ்லோகம்-1
எனது தாயார் என்னைக் கர்ப்பத்தில் வைத்து ஒவ்வொரு நிமிஷமும் என்னைத் தாங்கும் போது பட்ட கஷ்டத்துக்கு நான் பிரதியுபகாரம் ஏதாவது செய்திருக்கிறேனா?
அது இருக்கட்டும்.பிரசவ சமயத்தில்,போக்க முடியாததும்,பொறுத்துக் கொள்ள முடியாததுமான சூலைவலி என்கிற கொடுமையான ஒரு வலிக்கு நான் பதில் உபகாரம் செய்திருக்கிறேனா?
அதுவுமிருக்கட்டும்.என்னைப் பெற்றதும்,என்னை ரட்சிக்க ருசியில்லாத பொருட்களைச் சாப்பிட்டு வாழ்ந்த என் தாய்க்கு ஏதாவது செய்திருக்கிறேனா?
தனது உடலை இளைக்கச் செய்தும்,தூக்கமில்லாமலும்,எனது மலத்திலேயே படுத்து ஓராண்டு என்னை காத்த தாயாருக்கு ஏதாவது செய்திருக்கிறேனா?
யாராலும் தாய்க்குப் பிரதியுபகாரம் செய்ய முடியாது.எனவே அம்மா, உனக்கு நமஸ்காரம் செய்கின்றேன்,ஏற்றுக்கொள்.
ஸ்லோகம்-2
நான் கல்வி கற்கச் சென்றிருந்த சமயம்,தன்னை மறந்து தூங்கிய தாங்கள் நான் சன்னியாசியானதுபோல் கனவு கண்டு,அழுதவண்ணமாய் குருகுலம் வந்து கதறி,அங்கிருந்த எல்லோரையும் கதறி அழச்செய்த என் அம்மா,உனக்கு நமஸ்காரம்.
ஸ்லோகம்-3
அம்மா! நீ முக்தியடையும் சமயத்தில் கொஞ்சம் நீராவது உன் வாயில் விட்டேனா?பிறகும் ச்வதா மந்திரத்தினால் ச்ராத்தம்,தர்ப்பணமாவது செய்தேனா?உனது முக்தி சமயத்தில் தாரக மந்திரமாவது உன் காதில் ஓதினேனா?அச்சமயம் எனக்குக் கிடைக்காமலும்,எதுவும் செய்ய அதிகாரமில்லாததாலும்,சன்னியாசியானதால் எந்த வைதீகமும் கடைப் பிடிக்க முடியாது போனதால்,மனம் தவிக்கின்ற உன் மகனான என்னிடம் தயவு செய்ய வேண்டுமம்மா!உனது சரண கமலத்தைப் பிடித்து வேண்டுகிறேன்.
ஸ்லோகம்-4
அம்மா! என்னைக் காணும்போதெல்லாம் என் முத்தே கண்ணே,ராஜா, சிரஞ்சீவியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி,என்னிடம் கருணை, அன்பு, தயைகலந்த அமுதமான சொற்களால் என்னைச் சீராட்டி,,பாலூட்டி,தாலாட்டி வளர்த்த என் அன்னைக்கா வேகாத அரிசியை வாயிலே சமர்ப்பிப்பேன்?இதைப் பொறுக்க முடியவில்லையே! அம்மா நீயே சரண்.
ஸ்லோகம்-5
அம்மா,என்னைப் பெற்றபோது பொறுக்க முடியாத வேதனையுடன் அம்மா!அப்பா!சிவபெருமானே!கிருஷ்ணா!கோவிந்தா,ஹரே முகுந்தா என்றழைத்த வாக்கோடு கூடிய என் கருணைத் தெய்வமே!என் இரு கைகளையும் தூக்கி உனக்கு அஞ்சலி செய்து,உன்னைச் சரணடைகிறேன்.
Tuesday, July 7, 2009
குரு பூர்ணிமா
இன்று குரு பூர்ணிமா.வியாச பூர்ணிமா என்றும் அழைக்கப்படும் தினம்.இன்று நமது குருவுக்கு நன்றி தெரிவித்து அவருக்கு மரியாதை செய்தல் வேண்டும்.
ஒருவருக்கு நல்ல குரு வாய்ப்பதும் அந்தச் சிவகுரு அருளே.
எல்லோரும் பால் பிரண்டன் போல் அதிர்ஷ்டசாலிகள் அல்ல.அவர் தம் குருவைத்தேடும் காலத்துக் காஞ்சி மகாப் பெரியவரே உன் குரு திருவண்ணாமலையில் இருக்கிறார் என்று ரமண மகரிஷியிடம் அனுப்பி வைத்தார்.
இன்றைய அவசர வாழ்க்கையில்,இன்ஸ்டண்ட் காஃபி போல்,உடனடியாக ஆன்மிக முன்னேற்றம் எற்பட உதவக் கூடிய குருவாகத்தேடிப் பிடித்து,அவரிடம் சரண் அடைகிறோம்.அவர் நமது உண்மையான ஆன்மிக முன்னேற்றத்துக்கு உதவக்கூடியவரா,சரியான பாதையில் நம்மை நடத்திச் செல்லகூடியவரா என ஆராயாமல் கவர்ச்சியில் மயங்கி விடுகிறோம்.அதன் பலன்---?
திருமூலர் சொல்கிறார் கேளுங்கள்.
“குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே”
எளிதாகப் புரிகிறதல்லவா?
Thursday, March 5, 2009
அட்டாங்க யோகம்
ஸ்வாமி ஓம்கார் அவர்கள் தமது பதிவில் ‘அட்டாங்க யோகம்’ பற்றி மிக எளிய முறையில் அனைவருக்கும் புரியும்படி விளக்கியுள்ளார்கள்.அதைப் படித்ததும் திருமூலர் அட்டாங்க யோகம் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்த்தேன்.திரு மந்திரத்தில் சொல்லப்பட்ட சில கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
“இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே.”
இயமம்,நியமம்,கணக்கற்ற ஆதனம்,நலம் தரும் பிராணாயாமம், பிரத்தியாகாரம்,வெற்றி மிகுந்த தாரணை,தியானம்,சமாதி ஆகியவை பிறப்பறுக்கும் வாயிலாகிய ஞானத்தைப் பயக்கும்.
இயமம்
புலன்களினால் விளையும் இன்பம் நிலையற்றெதென உணர்ந்து,தீயவற்றில் மனம் செல்லாது கட்டுப் படுத்துதல்.
“கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லானியமத் திடையில்நின் றானே.”
ஓருயிரையும் கொல்லாதவன்,பொய் சொல்லாதவன், திருடாதவன், பிறரால் மதிக்கப்படும் குணம் உடையவன், நல்லவன், அடக்கமுடையவன்,நடுநிலை தவறாதவன், பகிர்ந்துண்பவன்,குற்றமற்றவன்,கள்ளுண்ணாதவன்,காமம் இல்லாதவன், ஆகிய இந்த இலக்கணக்கங்கள் உடையவனே இயமத்தான்.
இது போலவே ஹடயோகப் பிரதீபிகையும் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
“அஹிம்சா,சத்யமஸ்தேயம்,ப்ரம்மசர்யம்,க்ஷமா,தூதி:
தயார்ஜவம்,மிதாஹார:,சௌசம்,சைவ யமா தச.”
கொல்லாமை, வாய்மை,கள்ளாமை,காமமின்மை, பொறையுடமை உறுதியுடமை,தயை,நேர்மை,குறைவாக உண்ணல்,தூய்மை இப்பத்தும் இயமம்.
நியமம்
விதிமுறைகளை வழுவாதொழுகுதல்.
“தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ்
சிவன்றன் விரதமே சித்தாந்தக்- கேள்வி
மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீ ரைந்து
நிவம்பல செய்யின் நியமத்தனாமே.”
நியமத்தினை மேற்கொள்பவன்,தவம்,செபம்,மகிழ்ச்சி, தெய்வநம்பிக்கை,கொடை,முப்பொருள் உண்மை கேட்டல்,வேள்வி,சிவபூசை,ஒளி பொருந்திய சிவஞானமெனக் கூறப்பட்ட பத்தையும் உயர்வாய்க் கடைப் பிடிக்க வேண்டும்.
(முப்பொருள்-பதி,பசு,பாசம்)
பிற பின்னர்
Wednesday, February 11, 2009
நான் கடவுள்(அஹம் பிரஹ்மாஸ்மி)
வேதாந்த வாக்கியங்கள் நான்கு, மகா வாக்கியங்கள் என்று அழைக்கப் படுகின்றன.வேதாந்தம் என்பது வேதத்தின் அந்தம்,முடிவு.இவையே உபநிடதங்கள்.
ஐதரேய உபநிடதத்தில் காணப்படும் வாக்கியம்-”பிரஞ்ஞானம் பிரம்ம” என்பது.
பிருகதாரண்ய உபநிடதத்தில்காணப்படும் வாக்கியம்-”அஹம் பிரஹ்மாஸ்மி(பிரம்மைவாஹம் அஸ்மி)” என்பது.
சாந்தோக்கிய உபநிடதத்தில் சொல்லப்படும் வாக்கியம்-”தத்துவம் அஸி” என்பது.
மாண்டூக்ய உபநிடத்தில் வரும் வாக்கியம்-”அயமாத்மா பிரஹ்ம” என்பது.
எளிய முறையில் பொருள் சொன்னால்- 1)மெய்யுணர்வே பிரம்மம்(கடவுள்) 2)நான் கடவுள் 3)நீ அதுவாக இருக்கிறாய். 4)இந்த ஆத்மா பிரம்மன்.
இவை அனைத்தும் ஒரே பொருளையே உணர்த்துவன. நமக்குள்ளேயே கடவுள் இருப்பதை குறிக்கின்றன.
குரு சீடனுக்கு உணர்த்துகிறர்-த்வம்(நீ),தத்(அது),அஸி (இருக்கிறாய்).
இதை சீடன் உணர்ந்த நிலைதான் –அஹம் பிரஹ்மாஸ்மி.
தற்சமயம் மிகவும் பிரபலமாக இருக்கும் வாக்கியம்.
தன்னுள் இருக்கும் சிவனை உணரும்போது இந்த சீவன் சிவனாகிறான்.அதுவே அத்வைதம். இது பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார்? இதோ ஒரு மீள் பதிவு- இரண்டல்ல(அத்வைதம்)
அவன் மிகவும் களைத்திருந்தான்.பல நாட்களாய் அலைந்து உடலும் தேடலுக்கு விடை கிடைக்காமல் மனமும் சோர்ந்திருந்தான்.கையில் பணமில்லாததால் இரண்டு நாட்களாக ஒன்றும் உண்ணாமல் துவண்டிருந்தான்.ஊர் ஊராய் ஒவ்வொரு கோவிலாய் இறைவனைத் தேடித் தேடி அலுத்திருந்தான்.அந்த ஊர் கோவிலில் தெய்வம் சக்தி நிறைந்தது, இந்த ஊர்க் கோவிலில் இறைவன் விசேடமானவர் என்றெல்லாம் ஒவ்வொருவர் சொல்வதையும் கேட்டு ஒவ்வொரு ஊராய் அலைந்து அவன் தேடும் கடவுளைக்காணாமல் ஏமாற்றம் அடைந்திருந்தான்.இப்போது அந்தக் கிராமத்தின் ஆள் அரவமற்ற ஆற்றங்கரைக் கோவில் வாசலில் பசியின் காரணமாக கண்கள் இருண்டு மயக்கமடைந்து கீழே விழுந்தான்.
தன் முகத்தில் விழுந்த நீரின் குளிர்ச்சியில் அவன் கண் விழித்தான்.எதிரே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.அரையில் ஒரு துண்டு,தலையில் முண்டாசு,கையில் ஒரு கோல்.சிறுவனைப்பார்த்த அவன் முனகினான்"பசி".சிறுவன் இடுப்பில் முடிந்து வைத்திருந்த சில பழங்களை அவனிடம் நீட்டினான்.பழங்களைத்தின்று சிறிது பசியாறிய அவன் சொன்னான்"கடவுள் மாதிரி வந்து காப்பாற்றி விட்டாயப்பா".சிறுவன் கேட்டான் "என்னங்க ஆச்சு?"அவன் சொன்னான்"கடவுளைத்தேடி ஊர் ஊராய் சுற்றினேன்.காண இயலவில்லை."
சிறுவன் சிரித்தான்"இப்பதான் என்னைப்பார்த்து கடவுள் மாதிரின்னு சொன்னீங்க.அப்ப எங்கிட்ட கடவுள் இருந்தா ,எல்லார் கிட்டயும் இருக்கணும்,உங்க கிட்டயும் இருக்கணும்.ஆனால் கடவுளைத்தேடி ஊரெல்லாம் அலஞ்சேனு சொல்றீங்களே.சிரிப்புதான் வருது சாமி"
அவனுக்குப் பளார் என்று அறைந்தது போல் இருந்தது.கண்களை மூடித்திறந்தான்.சிறுவனைக் காணவில்லை.உண்மை உணர்ந்தான்.தான் வேறு கடவுள் வேறில்லை என்பதை உணர்ந்தான்.பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி புலன்களைக்குவித்து உள்ளே இருக்கும் கடவுளோடு ஒன்றினான்."அஹம் ப்ரம்ஹாஸ்மி"
"சீவன் என்ன சிவனார் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரைஅறிகிலர்
சிவனார் சிவனாரைஅறிந்த பின்
சீவனார் சிவனாயிட்டிருப்பரே"-(திருமூலர்)