Thursday, March 5, 2009

அட்டாங்க யோகம்

ஸ்வாமி ஓம்கார் அவர்கள் தமது பதிவில் ‘அட்டாங்க யோகம்பற்றி மிக எளிய முறையில் அனைவருக்கும் புரியும்படி விளக்கியுள்ளார்கள்.அதைப் படித்ததும் திருமூலர் அட்டாங்க யோகம் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்த்தேன்.திரு மந்திரத்தில் சொல்லப்பட்ட சில கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

“இயம நியமமே எண்ணிலா ஆதனம்

 நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ்

 சயமிகு தாரணை தியானஞ் சமாதி

 அயமுறும் அட்டாங்க மாவது மாமே.

 

இயமம்,நியமம்,கணக்கற்ற ஆதனம்,நலம் தரும் பிராணாயாமம், பிரத்தியாகாரம்,வெற்றி மிகுந்த தாரணை,தியானம்,சமாதி ஆகியவை பிறப்பறுக்கும் வாயிலாகிய ஞானத்தைப் பயக்கும்.

 

இயமம்

 

  புலன்களினால் விளையும் இன்பம் நிலையற்றெதென உணர்ந்து,தீயவற்றில் மனம் செல்லாது கட்டுப் படுத்துதல்.

 

“கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன்

 நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய

 வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்

 இல்லானியமத் திடையில்நின் றானே.

 

ஓருயிரையும் கொல்லாதவன்,பொய் சொல்லாதவன், திருடாதவன், பிறரால் மதிக்கப்படும் குணம் உடையவன், நல்லவன், அடக்கமுடையவன்,நடுநிலை தவறாதவன், பகிர்ந்துண்பவன்,குற்றமற்றவன்,கள்ளுண்ணாதவன்,காமம் இல்லாதவன், ஆகிய இந்த இலக்கணக்கங்கள் உடையவனே இயமத்தான்.

 

இது போலவே ஹடயோகப் பிரதீபிகையும் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

“அஹிம்சா,சத்யமஸ்தேயம்,ப்ரம்மசர்யம்,க்‌ஷமா,தூதி:

 தயார்ஜவம்,மிதாஹார:,சௌசம்,சைவ யமா தச.

 

கொல்லாமை, வாய்மை,கள்ளாமை,காமமின்மை, பொறையுடமை உறுதியுடமை,தயை,நேர்மை,குறைவாக உண்ணல்,தூய்மை இப்பத்தும் இயமம்.

 

நியமம்

விதிமுறைகளை வழுவாதொழுகுதல்.

 

“தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ்

 சிவன்றன் விரதமே சித்தாந்தக்- கேள்வி

 மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீ ரைந்து

 நிவம்பல செய்யின் நியமத்தனாமே.

 

நியமத்தினை மேற்கொள்பவன்,தவம்,செபம்,மகிழ்ச்சி, தெய்வநம்பிக்கை,கொடை,முப்பொருள் உண்மை கேட்டல்,வேள்வி,சிவபூசை,ஒளி பொருந்திய சிவஞானமெனக் கூறப்பட்ட பத்தையும் உயர்வாய்க் கடைப் பிடிக்க வேண்டும்.

(முப்பொருள்-பதி,பசு,பாசம்)

 

பிற பின்னர்