Monday, July 28, 2008

ஒன்றே குலம்,ஒருவனே தேவன்.

ஒரு நாள் திடீரென்று அந்த ஊரில் மதக் கலவரம் வெடித்தது.இரு மதத்தைச் சார்ந்தவர்கள் வன்முறையில் இறங்கினர்.பொருட்சேதம்,உயிர்சேதம் ஏற்பட்டது.காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி அதில் சில உயிர்கள் பலியாகின .வழிபாட்டுத் தலங்களைச் சுற்றிப் பலத்த காவல் போடப்பட்டது.காவலுக்கு வந்த காவலர்கள் ஞானியார் இருந்த மண்டபத்தில் சில நேரம் வந்து இளைப்பாறினர்.ஊரில் நடந்தவற்றைப் பார்த்து, பார்க்காதவற்றைப் பற்றி கேட்டு,ஞானியார் மனம் நொந்து போயிருந்தார்.உணவைத்துறந்து ஓரிறு நாட்கள் பெரும் பகுதி நேரம் தியானத்திலேயே இருந்தார்.நிலைமை ஓரளவு சரியானபின்,சிலர் முன்பு போலவே அவரை நாடி வந்தனர்.அவர் அவர்களில் யாரையும் குறிப்பாகப் பார்க்காமல்,பொதுவில் தனக்குத்தானே பேசுவது போல் பேச ஆரம்பித்தார்.



"இறைவன் படைப்பில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை ஆறு விதமாக உயிர்கள் படைக்கப் பட்டிருக்கின்றன.கிடைத்தற்கரிய மனிதப் பிறவி எடுத்த நாம் ஆறறிவு உள்ளவர்களாகவா நடந்து கொள்கிறோம்?இம் மதங்களை, சாதிகளை,அதன் பிரிவுகளை,உட்பிரிவுகளை எல்லாம் இறைவனா படைத்தான்?மனிதனே இவற்றையெல்லாம் படைத்து விட்டுத் தான் படைத்த மதத்தின் பெயரால்,இறைவனை முன்னிறுத்திச் சண்டை, சச்சரவு , கலவரங்களில் ஈடுபடுவது அவன் வணங்கும் அந்த இறைவனையே அவமானப் படுத்தும் செயலல்லவா?இரண்டு மதங்களுக்குள்சண்டை,ஒரே மதத்தில் இரு சாதிகளுக்குள் சண்டை,ஒரே சாதிக்குள் உட்பிரிவுகளுக்குள் சண்டை இவையெல்லாம் அறிவற்ற செயலல்லவா?"



"அனைத்து உயிர்களுக்கும் இறைவன் ஒருவனே.மதங்களால் பிரிந்து வழிபாட்டு முறைகளால் மாறுபட்டாலும்,எல்லோரும் மனிதர்கள் என்னும் ஒரே குலமே.நமக்கு நன்மை நடக்க விரும்பும்போது அதன் காரணமாகப் பிறர்க்குத் தீமை விளைய எண்ணுதல் கூடாது.அவ்வாறு எண்ணுவதால், பகையும் போரும் மூண்டு உயிர்ச்சேதம் ஏற்படும் அல்லவா?எனவே நன்மையே நினைக்க வேண்டும்.தீய செயல் செய்வதற்குத்தான் வெட்கப் பட வேண்டும்.நல்லன எண்ணி நல்லன செய்பவர்கள் வெட்கப் பட ஏதும் இல்லை.எண்ணம்,சொல்,செயல் எல்லாம் நல்லவையாகவே இருக்கட்டும்.எந்த முறையில் வழி பட்டாலும்,பரம்பொருள் ஒருவனே என்பதை உணர்ந்து,அவனையே சிந்தையில் இருத்தி அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்தால் வாழ்க்கை இனியதாகவே இருக்கும்.உணருங்கள்"

ஞானியார் தியானத்தில் ஆழ்ந்தார்.

"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே"----(திருமூலர்)