Wednesday, December 12, 2007

தானச்சிறப்பு

"ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே"--(திருமூலர்)

எல்லோருக்கும் கொடுங்கள்.அவர்,இவர் என்று வேற்றுமை பாராட்டாதீர்கள்.வரும் விருந்தை எதிர்பார்த்து அவருடன் கூடி உண்ணுங்கள்.பழம் பொருளைப் பாதுகாத்து வைக்காதீர்கள்.பசி உடையவர்களாக மிக விரைந்து உண்ணாதீர்கள்.காக்கைகள் உண்ணும்போது மற்றக் காகங்களை அழைத்து உண்பதைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள்.

இங்கு குறிப்பிடத் தக்கது "ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்" என்பதுதான்.இவர் உயர்ந்தவர்,அவர் தாழ்ந்தவர் என்றோ இவர் நம்மவர் அவர் அயலவர் என்றோ வேறு படுத்தாமல் வேண்டி வந்த அனைவருக்கும் ஈதல் வேண்டும் என்பது கருத்து.

இங்கு "தக்கார்க்கீதலே தானம்"மற்றும் "பாத்திரம் அறிந்து பிச்சையிடு" என்னும் வழக்கு மொழிகள் ஒப்பு நோக்கத் தக்கன.இவை தவறா?இல்லையெனில்,ஏன் இவ்வறு சொல்லப்பட்டன?

தானம் கேட்டு வருபவர்களில் சிலர் எக்காரணத்துக்காக உதவி பெறுகிறார்களோ அக்காரணத்துக்காக அதைப் பயன் படுத்தாமல் தவறான செயல்களுக்காகப் பயன் படுத்தி விடுகிறார்கள்.தானம் பெற வரும் போது அவர்கள் நோக்கமே ஏமாற்றிப் பணம் பறித்து அதைத் தவறாகப் பயன் படுதுவதுதான்.எனவே இந்த மாதிரி மனிதர்களிடம் ஏமாறாமல் இருப்பதற்குதான் மேலே குறிப்பிடப் பட்ட வழக்கு மொழிகள் சொல்லப்பட்டன.எனவே இங்கு பசியென்று வருபவர்க்கு உணவளிப்பது வேறு;பொருள் உதவி செய்யும்போது நோக்கம் அறிந்து உதவுவது என்பது வேறு என்றுணர்தல் வேண்டும்.

Wednesday, December 5, 2007

நமச்சிவாய

"அஞ்சு உள ஆனை அடவியுள் வாழ்வன;
அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன;
அஞ்சையும் கூடத்துஅடக்கவல்லார்கட்கே
அஞ்சு ஆதி ஆதி அகம்புகலாமே."--(திருமூலர்)

உடல் என்ற காட்டுள் ஐம்பொறிகளாகிய ஐந்து யானைகள்வாழ்கின்றன.எவர்க்கும் கட்டுப் படாமல் அவை அலைந்து திரிகின்றன.அவற்றை அடக்குவதற்கு ஐந்து அங்குசங்கள் இருக்கின்றன.அவை 'நமசிவாய' என்ற ஐந்து எழுத்துக்களாகும்.அந்த ஐந்து யானைகளையும் ஐந்தெழுத்து மந்திரத்தைக் கொண்டு அடக்க வல்லவரே அந்தப் பரமாத்மாவை அடைய முடியும்.

இங்கு ஐம்பொறிகளும் ஐந்து காட்டு யானைகளாக உருவகப் படுத்தப் பட்டுள்ளன.அவை இந்த உடல் என்னும் காட்டில் வசிக்கின்றன.விருப்பம் போல் அலைந்து திரிகின்றன.காடென்பது புதர்கள் மண்டி,இருள் சுழ்ந்து காணப்படும் .அது போல இந்த உடல் அழுக்காறு,அவா,வெகுளி போன்ற புதர்கள் மண்டி,அறியாமையாகிய இருள் சூழ்ந்திருக்கிறது .நமசிவாய என்ற ஐந்தெழுத்தை ஓதுவதன் மூலம் ஐம்பொறிகளை அடக்குவதோடல்லாமல் இந்த உடலில்(மனதில்) மண்டியுள்ள புதர்களை,இருளை நீக்கி இறையருளைப் பெறவும் முடியும்.

இங்கு 'அஞ்சாதி ஆதி' என்றது ஐம்பூதங்களுக்கும் முதல்வனான சிவனை.
திருவாசகத்தின் ஆரம்பமே"நமச்சிவாய வாஅழ்க" என்பதுதான்.யஜுர் வேதத்தின் மையமாக விளங்குவது ஸ்ரீ ருத்திரம்.இந்த ஸ்ரீ ருத்திரத்தின் நடுவிலே அமைந்தது நமச்சிவாய மந்திரம்.ஸ்ரீருத்திரத்தைக் கற்று ஓதுவது என்பது எல்லோர்க்கும் சாத்தியமன்று.ஆனால் 'நமச்சிவாய"என்று சொல்வது எளிது.இதற்கு குருமுகமாக உபதேசம் எதுவும் தேவையில்லை.எனவேதான் திருமூலரும் இந்த எளிய மந்திரமே புலன்களை அடக்கி இறையருள் பெறும் வழியாகும் என்று சொல்கிறார்.