Monday, November 26, 2007

புலன் மயக்கம்

ஒரு ஊரில் ஒரு அந்தணன் இருந்தான்.அவனிடம் ஐந்து கறவைப் பசுக்கள் இருந்தன.நல்ல உயர்ந்த ரகப் பசுக்கள்.நன்கு,அதிகமாகப் பால் தரக்கூடிய பசுக்கள்.ஆனால் அப் பசுக்களை மேய்ப்பதற்கு எந்த விதமான எற்பாடும் அவன் செய்யவில்லை.அப்பசுக்கள் தம் மனம் போல தினமும் எங்கெங்கோ மேய்ந்து திரிந்து பாலைச் சொரிந்து விட்டு வீடு திரும்பி வந்தன . அப்பசுக்களின் பயன் அதன் உரிமையாளனுக்குக் கிடைக்காமல் போயிற்று. அப்பசுக்களைச் சரியான முறையில் தினமும் மேய்ப்பதற்கு அவன் ஏற்பாடு செய்திருந்தால் நல்ல பயன் அடைந்திருப்பான்.அந்தப் பசுக்கள் ஐந்தும் பாலாய்ச் சொரிந்திருக்கும்.

"பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரு முண்டாய் வெறியு மடங்கினால்
பார்ப்பான் பசுவைந்தும் பாலாச் சொரியுமே"--(திருமூலர்)
( பார்ப்பான்-ஆன்மா; அகம்-உடல்; ஐந்து பசுக்கள்-ஐம்புலன்கள் )
ஆன்மா என்ற பார்ப்பானின் உடலில் ஐம் பொறிகளான கறைவைப் பசுக்கள் ஐந்து உள்ளன.அவை மேய்ப்பவர் இன்றி விருப்பம் போல் திரிவன.(புலன்கள் அடக்கப் படாமல் இன்பம் தேடி அலைகின்றன.)புலன் நுகர் பொருட்கள் மீதுள்ள ஆசையை அறுத்து இறைவன் பால் மனத்தைச் செலுத்தினால் பொறிகள் என்ற பசுக்கள் பேரின்பம் என்ற பாலைத் தரும்.

"சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு."-திருக்குறள்

Friday, November 23, 2007

மீண்டும் வருகிறேன்!

வலைப்பதிவுலகத்திலிருந்து இரண்டு மாதம் விடுப்பில் செல்ல வேண்டியதாகி விட்டது.ஒரு தேர்வுக்காகத் தயார் செய்துகொண்டிருந்தேன்.தேர்வும் எழுதி விட்டேன்.இந்த வயதில் என்ன தேர்வு என்று நீங்கள் புருவம் உயர்த்துவது தெரிகிறது.ஏற்கனவே மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் சோதிடப் பட்டயப் படிப்பு முடித்து விட்ட நிலையில் கலகத்தா விஷ்வ ஜோதிஷ வித்யாபீடத்தில் ஜோதிடத்தில் ஒரு தேர்வு எழுதியுள்ளேன்.தொடர்ந்து எழுதவும் போகிறேன்.பணிஓய்வு பெற்றபின் உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும் அல்லவா?ஜோதிடத்தை ஒரு தொழிலாக இல்லாமல் ஒரு சேவையாகச் செய்ய வேண்டும் என்பதே என் நோக்கம்.தற்போதும் அவ்வாறுதான் செய்து வருகிறேன்.
இப்போது விடுப்பு முடிந்து மீண்டும் வந்து விட்டேன்.திருமந்திரம் தொடரும்.
சந்திப்போம்.நல்லன சிந்திப்போம்.