Wednesday, November 20, 2013

இறைவனின் இயல்புகள்!



நீண்ட நாட்களாக பயணம் சென்றிருந்த  ஞானி அன்றுதான் திரும்பி வந்திருந்தார்.அவர் முன் ஊர் மக்கள் காத்திருந்தனர்.தன் பயம் பற்றியெல்லாம் ஞானி விரிவாக எடுத்துச் சொன்னார். பல கோவில்களுக்குச் சென்ற அனுபவத்தை விவரித்தார்.

ஒருவன் கேட்டான்”ஸ்வாமி!இறைவன் என்பவன் ஒருவனா?இருவரா?பல பேரா? விளக்குங்கள்” என்றான்.

ஞானி விளக்க ஆரம்பித்தார்......

திருமந்திரத்தின் முதல் பாடல் சிவம் பற்றி அழகாகச் சொல்கிறது.பாடலை முதலில் சொல்கிறேன் கேளுங்கள்..

“ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
 நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
 வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
 சென்றனன் தானிருந் தானுர்ணந் தெட்டே”

சிவம் ஒன்றாகவும்,அவனும் அவனுடைய இன்னருளும் என இரண்டாகவும்,அயன்,அரி,அரன் என மூன்றாகவும்,நான்கு நிலைகளாக உணரப் பெற்றும் ஐம்பொறிகளை வென்றும்,
அறுவகைச் சமயத்தோர்க்கும் அவ்வவர் பொருளாய்,ஆறாதாரங்களைக் கடந்தும்,
ஏழாவதாகிய துவாத சாந்தப் பெருவெளியில் சென்றும் அட்டமூர்த்திச் சொருபமாய் உணரப் பெற்றவர்.

ஒன்று என்று சொன்னால் அது என வரவேண்டும்.அல்லது ஒருவன் அவன் என வரவேண்டும். அவ்வாறில்லாமல் ஏன் ஒன்றவன்தானே எனச் சொன்னார் ?

அவன் உயர் திணை அஃறிணைப் பொருள்கள் அனைத்திலும் கலந்து அனைத்தையும் கடந்து இருப்பவன்.ஞானசம்பந்தர் கூறுவார்”எல்லாத் த்துவங்களையும் கடந்து வாக்கு மதிட்கு எட்டாமலிருந்துள்ள தற்சொரூபம்” என்ரு

இரண்டு என்றது அவனும் அவனது அருளுமென இரண்டு.தன்னிலிருந்து அருளைப் பிரித்து அதற்குச் சக்தியெனப் பெயர் அமைத்து இரண்டாயினன்.

மூன்று என்றதுபலவகையாகப் பொருள் கொள்ளப்படலாம்.படைத்தல்(பிரம்மா) காத்தல்
(விஷ்ணு) அழித்தல்(ருத்திரன்),என்றோ ஆன்மா, சிவம்,சக்தி என்றோ,அவன்,அவள்,அது என்றோ சாத்வீகம், ராஜசம்,தாமசம் ஆகிய முக்குணங்களையோ ,பதி,பசு,பாசம்  என்பவற்
றையோ,இச்சா சக்தி,கிரியா சக்தி,ஞான சக்திகளையோ குறிப்பதாக்கொள்ளலாம்.

நான்கு என்பது நான்கு வேதங்களையோ,சரியை,கிரியை,யோகம்,ஞானம் ஆகிய நான்கு அனுபவங்களையோ குறிப்பதாக கொள்ளலாம்.இதையே வேறு விதமாகவும் கொள்ளலாம். விசுவாதிகன்,விசுவ காரணன்,அந்தர்யாமி,விசுவரூபி என நான்காக உணரப் படுபவர்.

ஐந்து என்பது,ஐந்து புலன்களையோ,ஆக்கல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் ஆகிய செயல்களையோ குறிப்பதாக் கொள்ளலாம்.

ஆறு என்பது  மூலாதாரம்,சுவாதிட்டானம்,மணிபூரகம்,அநாகதம்,விசுத்தி,ஆக்கினை,ஆகிய ஆறு ஆதாரங்களைக் குறிப்பதாகவோ,(இவற்றுக்கான மூர்த்தி சொரூபங்கள் விநாயகர், பிரமன், திருமால்,ருத்திரன்,மகேசுவரன்,சதாசிவன்) மந்திரம்,பதம்,வண்ணம், கலை, புவனம், தத்துவம் ஆகிய ஆறு அத்துவாக்கள் எனவும் கொள்ளலாம்.

ஏழு என்பது ஆறாதாரங்களைக் கடந்த சஹஸ்ராரமாகவோ, ஏழுமேல் உலகம் ,ஏழு கீழ் உலகம் ஆகியவற்றையோ கொள்ளலாம்.

எட்டு உணர்ந்தான் என்பது,நிலம்,நீர்,நெருப்பு,காற்று ஆகாயம்,சூரியன்,சந்திரன்,சீவன் ஆகிய வற்றைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.தமிழில் ’அ’ என்பது எட்டைக் குறிக்கும்.எனவே அவன் அகரமாக உணரப் பெற்றவன் எனவும் கொள்ளலாம்.(அகர,உகர,மகரச் சேர்க்கையே ’ஓம்’)

எவ்வாறு நோக்கினும் இறைவன் ஒருவனே!அவன் தோற்றம் பல!



Monday, August 19, 2013

திருமந்திரம்-சூனிய சம்பாஷணை--”வழுதலை வித்திட......”

நேற்று வலைப் பதிவுகளில் மேய்ந்து கொண்டிருந்தபோது,ஒரு பதிவின் தலைப்பு,என்னை நிறுத்தியது.தலைப்பு-”திருமந்திரம்”;பதிவர் கோவை கார்த்திகேயன்.

என் தலையில் பித்தன்,முக்கண்ணன்,சொக்கன் ஓங்கிக் குட்டியது போல் உணர்ந்தேன்.பல மாதங்களாகத் திருமந்திர இடுகைகள் ஏதும் எழுதவில்லையே என சில நாட்களாக ஒரு உறுத்தல்;பிரதோஷ தினமாகிய நேற்று,சிவனே முன் வந்து எனக்குக் கட்டளையிட்டு விட்டான்.

பித்தனே(சென்னை அல்ல!.பித்தா,பிறைசூடி எனச் சுந்தரர் பாடியவர்) உன் கட்டளையை ஏற்றுத் திருமந்திரப்பதிவுகளை தொடர எண்ணுகிறேன்,அருள் புரி!

பித்தனே(சென்னைதான்) சற்றே விலகியிரும் பிள்ளாய்,இச் சொக்கனுக்கு இடம் விட்டு!

சூனிய சம்பாஷணை பற்றிய முதல் பதிவை பிப்ரவரி 2011 இல் எழுதினேன்.இன்று அப்பதிவை ஓர் அறிமுகப் பதிவாக மீண்டும் தந்து விட்டுப் பின் மற்றப் பாடல்களைத் தொடர எண்ணம்.
இதோ............

.//.........திருமந்திரத்தின் ஒன்பதாவது தந்திரத்தில்,’சூனிய சம்பாஷணை என்று ஒரு
பகுதி உள்ளது.இதில் மொத்தம் எழுபது பாடல்கள் (மந்திரங்கள்) உள்ளன. எளிதில் பொருள் விளங்காத குறியீட்டு மொழியில் இப்பாடல்கள் அமைந்துள்ளன.

இம்மந்திரங்களின் கருத்து இதுதான் என்று வரையறுக்கமுடியாதபடி அவை அவரவர் அனுபவத்துக்குத் தக்க வெவ்வேறு பொருள்களைக் கொண்டுள்ளன. சூனியம் என்பது ஒன்றும் இல்லாதது.இங்கு இதுதான் பொருள் என்று வரையறுக்க முடியாத நிலையைக் குறிக்கிறது.சித்தர்களின் குறியீட்டு மொழி புரிவது கடினம்.இங்கு நான் புரிந்துகொண்டு எழுதுகிறேன் என்று சொன்னால் அது பொய்.அந்த அளவுக்குப் பக்குவமும் ஞானமும் எனக்கில்லை.பல உரைகளில் படித்ததை அடிப்படையாகக் கொண்டே இதை எழுதுகிறேன். இதைப் படிக்கும் உங்களுக்குப் புதிய கருத்துக்கள் தோன்றலாம்.வேறு சில விளக்கங்கள் படித்திருக்கலாம்.அவ்வாறெனில் தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

இங்கு நான் சில பாடல்களை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளேன்.ஒரு சிறிய முயற்சி.

மந்திரம்.2868.
வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது
தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே.

இதை அப்படியே பொருள் கொண்டால்தோட்டத்தில் புழுதியைத் தோண்டினேன். அக்குழியில் கத்தரிக்காய்(வழுதல்) விதை விதைத்தேன்.அதிலிருந்து பாகற்கொடி படர்ந்தது.அதில் பூசணி பூத்தது.அதைக் கண்ட,அங்கிருந்த தோட்டக் குடிகளெல்லாம் பயந்து,தம் சிறு தெய்வங்களைத் தொழுது கொண்டு ஓடினார்கள்.அதன் பின் அக்கொடி யில்  வாழைக்கனி முற்றிலுமாகப் பழுத்தது

நேரடியாகப் பார்த்தால் பொருளற்ற ஒரு பாடல்.ஆனால் அறிஞர்கள் இதன் கருத்தை அனுபவ பூர்வமாக விளக்கும்போது வியப்பாக இருக்கிறது. நடக்கமுடியாத ஒரு நிகழ்ச்சி மூலம் தத்துவங்கள் விளக்கப் படுகின்றன..

இங்கு தோட்டம் என்பது நமது உணர்வாகிய நெஞ்சக் கமலம். புழுதியைத் தோண்டுத லாவது,அவ்வுணர்வுகளைப் பயந்து வரும் தத்துவங்களின் இயல்பை ஆராய்ந்து காணுதல்.வழுதலை வித்திடல் என்பது ஐந்தெழுத்தை உள் ஊன்றி நிறுத்துதல்.பாகல் என்பது நிலையில்லாப் பொருள்களில் பற்றற்று இருத்தல்.பூசனி பூத்தது என்பது திருவருள் விளக்கம்.தோட்டக் குடிகள் என்பது நம் அஞ்ஞானம்.வாழை பழுத்தது என்பது இறை அருட்பேறு.

இதையே வேறு முறையில் காணும்போது இவ்வாறு கொள்ளப் படுகிறது...... வழுதலை வித்திடல்-குண்டலினி யோகப் பயிற்சி;பாகல் முளைத்தது-வைராக்கியம் கிடைத்தது;புழுதியைத் தோண்டினேன்-ஆன்மா பற்றிய தத்துவ விசாரம்;பூசனி பூத்தது-சிவ தத்துவத்தைத் தெரிந்து கொள்ளல்;தோட்டக் குடிகள் ஓடினர்-புலனுணர்வுகள் அகலுதல்;பழுத்தது வாழைக்கனி--சிவானுபவம் கிட்டல்.

குண்டலினி யோகமாவது,மூலாதரத்தில் உறங்கும் சக்தியை மேலேற்றி சஹஸ்ராரத்தை அடையச் செய்தல்......சிற்றின்பத்தில் செலவிடும் சுக்கிலத்தை மூலக்கனல் ஆக்கிப் புருவ மத்தியாகிய ஆக்ஞைக்கு ஏற்ற,அங்கு தோன்றும் அருட்சக்தி அருளால், தத்துவப் பிணிப்பு நீங்கி உணர்வுகள் தூய்மை அடைந்து, சஹஸ்ராரம் அடைகிறது.சீவ கரணங்கள்,சிவ கரணங்களாகி சிவானுபவம் விளைகிறது.

வேறு விதமாகச் சொன்னால்...வழுதல் என்பது துறவையும்,பாகல் என்பது உலக மறுப்பையும்,பூசனி என்பது சிவபெருமானையும், தோட்டக் குடிகள் என்பது, ஐம்புலன்களையும்,மும்மலங்களையும்,வாழை பழுத்தல் என்பது முத்தியையும் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்படுகிறது.

சித்தர்களின் கருத்தை யாரால் அறிந்து கொள்ள முடியும்? //
Top of Form


Monday, December 10, 2012

சிவனின் கண்டம் கறுத்ததேன்?

சிவனுக்கு நீலகண்டன் என்றொரு பெயரும் உண்டு.வழக்கில் கருமையை நீலம் என்றும் பச்சை என்றும் சொல்வதுண்டு.திருமாலைப் பச்சைமேனியன் என்றும் இராமனை நீல நிறத்தவன் என்றும் கூறுவது கருமையையே குறிக்கும்.அது போலவே சிவனின் கழுத்து கறுத்த காரணத்தால் அவர் நீலகண்டன் என அழைக்கப்பட்டார்.

சிவனின் கழுத்து கறுத்ததற்குக் காரணமாக ஒரு கதை உண்டு.பாற்கடலைத் தேவர்களும் அசுரரும் சேர்ந்து கடைந்தபோது அதிலிருந்து நஞ்சு தோன்ற,  மற்றவர் நலன் கருதிச் சிவன் அதை உண்டதாகவும்,பார்வதி தேவி அவர் கழுத்தைப் பிடித்து நஞ்சு உள்ளே செல்லாமல் நிறுத்த,சிவனது கழுத்து கறுத்ததாகவும் கதை சொல்வர்.

இது பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார்--

”அண்டமொ டெண்டிசை தாங்கும் அதோமுகம்
 கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை
 உண்டது நஞ்சென் றுரைப்பர் உணர்விலோர்
 வெண்டலை மாலை விரிசடையோற்கே”

வெண்மையான தலைமாலையை  அணிந்த சிவபெருமானுக்கு அண்டங்களையும் எட்டுத் திசைகளையும் தாங்கிக் கொண்டிருக்கும் அதோ முகத்தின் கழுத்து கரிய நிறம் உடையதாய் இருப்பதை அறியார் எவருமிலர்.அவர் நஞ்சை உண்டதால் கருமை அடைந்தது என்று உரைப்பவர் அறிவற்றவர்.

பாடலின் பொருள் இவ்வளவே.

ஆனால் இது மட்டுமா திருமூலர் சொல்வார்?

உட்கருத்து என்ன எனப் பார்த்தால்,---

சுக்கிலத்தை கீழ்நோகிச் செலுத்தி  வீணாக்குவது கருமையின்,அறியாமையின் குறியீடு. ஆனால் அதை மேல் நோக்கிச் செலுத்துதல்,விந்து மறித்தல் அறிவின் குறியீடு .தொண்டைக் குக் கீழ் உள்ள உடற்பகுதி அறியாமைக்கும்,தொண்டைக்குமேல்,புருவ நடுவும்  அதற்கு மேலும் உள்ள பகுதி ஒளிமயமான அறிவின் குறியீடு ஆகும்.நஞ்சு உண்ணுதல் என்பது சுக்கில சக்தியை மடைமாற்றி ஆக்ஞாசக்கரத்திற்கு மேல் செலுத்துதல் என்பதே இதன் உட்பொருள். இதுவே சிவன் உண்ட நஞ்சின் தத்துவம்

ஆனால் இக்கருத்து குண்டலினி பயிலும் மனிதர்க்குப் பொருந்தினும்,தலைவனான சிவனுக்குப்  பொருந்துமா?

எனவே பஞ்சாக்ஷர தீபத்தில் வேறு பொருள் கொள்ளப் பட்டிருக்கிறது

பாற்கடல் என்பது மூவகையாருயிர் வர்க்கம்;
தேவர்கள் என்பது நல்வினை
அசுரர்கள் என்பது தீவினை
ஆன்மபோதம் என்னும் மலையினால் பாச ஞானம் என்னும் அமுதம் பெறும் பொருட்டுக் கடையும்போது  ஆணவத்தின் காரியமாகிய,அஞ்ஞானம்,மோகம்,மதம்,மாற்சரியம் ஆகிய நஞ்சு திரண்டு உயிர்கள் மறைக்குங்காலத்து இறைவன் அந்த நஞ்சை விழுங்கி,”இவ்வண்ணம் எப்போதும் காப்போம்”என்பதற்கு அறிகுறியாகக்  கண்டத்தில் வைத்தான்,எனப் பொருள் கொள்ளப்படுகிறது.

அதோ முகம் என்பது இறைவனின் ஆறாவது முகம்.அவனது முகங்கள் பற்றிப் பிறிது ஒரு சமயம் பார்ப்போம்.







Monday, April 30, 2012

இறைவன் எங்கு இருக்கிறான்?எங்கு இல்லை?

வழ்க்கம் போல் ஞானியார் முன் ஊர் மக்கள் பலர் அமர்ந்து அவரது அறிவுரையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.தியானம் முடிந்து கண் விழித்த ஞானியார் அனைவரையும் பார்த்துச் சிரித்து ஆசி வழங்கினார்.

சொக்கன் ஞானியைப் பார்த்து,அடக்கத்துடன் பேசத் தொடங்கினான்.

“சாமி,எங்க வீட்டு மாடத்திலே,பிடாரி அம்மன் இருக்குதுன்னு பரம்பரையாக் கும்பிட்டுக் கிட்டு வரோம்.இன்னிக்கு ஆத்தாவுக்குப் படையல் வச்சோம்,அந்தப் பிரசாதங்கள் சாமிக்காகக் கொண்டு வந்திருக்கிறேன்.”

ஞானி பிரசாதங்களைப் பார்த்தார்.பின் சொக்கனைப் பார்த்தார்.சிரித்தார் .பின் கேட்டார் ”.படையல் எல்லாம் வைத்து இறைவனிடம் என்ன வேண்டிக் கொண்டாய்.? இன்னும் காடு,கழனி வாங்க வேண்டும்,சொத்து பெருக வேண்டும் இது போன்ற உன் பல ஆசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றுகேட்டாய் அல்லவா?நீ மட்டுமல்ல. அனைவருமே அப்படித்தான். ஆனால் இறைவன் உன் வீட்டு மாடத்திலும் மண்டபத்திலும்,  கூடத்திலும் கோவிலிலும்,வேடம் அணிந்த ஆஷாடபூதிகளிடமும் இருக்கிறான் என்றா எண்ணுகிறாய்.இல்லை. ஆசையை விட்டவர் யாரோ அவருடைய நெஞ்சத்தில் இருக்கிறான். நெஞ்சம் என்பது ஆசைகளால் நிரம்பியிருந்தால் அந்த ஆசைகள்  மூலம் வரும் மற்றவை--கோபம், பொறமை, வெறுப்பு இப்படிப் பலவும்- நிரம்பி அதனால் ஏற்படும் குப்பைகளும் சேர்ந்து நிரம்பியிருக்கும்.ஏற்கனவே நிரம்பியிருக்கும் ஒரு இடத்தில் எப்படி வேறு ஏதாவது புக முடியும்.எனவே மனதை ஆசைகளற்றுத் தூய்மையாக வைத்துக் கொண்டால் அந்தக் காலி இடத்தில் இறைவன் அமர்ந்து கொள்வான்”
        ”மாடத்  துளானலன்  மண்டபத்  துளானலன்
         கூடத்  துளானலன்    கோயி லுளானலன்
         வேடத் துளானலன்  வேட்கைவிட்  டார்நெஞ்சில்
         மூடத் துளேநின்று  முத்திதந் தானே”--   (திருமந்திரம்)

(இறைவன்  வீடுகளின் மாடத்திலும், மண்டபத்திலும், கூடத்திலும்,கோவிலிலும்,திரு வேடத்திலும் அணுக்கமாக இருப்பவன் அலன்.அவாவறுத்தார்  நெஞ்சில் மறைந்திருந்து,வீடு பேறு அளிப்பவன்) .

Thursday, April 26, 2012

சூனிய சம்பாஷணை-மூச்சுப் பயிற்சி.

 ஓம் நமசிவாய

மீண்டும் ஒரு நீண்ட இடைவெளி!

திருமூலர் இன்றுதான் மீண்டும் அழைத்திருக்கிறார்.

இன்றைய பாடல்--

     ”ஏற்றம் இரண்டுள ஏழு துரவுள
     மூத்தான் இறைக்க இளையான் படுத்தநீர்
     பாத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடில்
     கூத்தி வளர்த்ததோர் கோழிப்புள் ளாமே

நேரடியான பொருள் என்று பார்த்தால் மிக அற்பமான ஒரு செய்தியாகவே தோன்றும்

ஏழு கிணறுகள்,இரண்டு ஏற்றங்கள் உள்ளன.ஏற்றத்தில் மூத்தவன் நீர் இறைக்க, இளையவன் பாய்ச்ச ,நீர்,வயலுக்குப் பாயாமல் வெறுமனே சென்று கெடுமாகில்,அது பயனின்றிப் போகும்;எவ்வாறெனில்,ஒரு விலைமாது வளர்த்த பையனைப்போல.

இதன் மூலம் என்ன சொல்கிறார் திருமூலர்.?

இங்கு ஏழு துரவுள என்பது உடலில் உள்ள ஏழு சக்கரங்களை--மூலாதாரம்,சுவாதிட்டானம்,மணிபூரகம்,அநாகதம்,விசுத்தி,ஆக்ஞை,சகஸ்ராரம் என்பன--குறிக்கின்றது.

ஏற்றம் இரண்டுள என்பது  மூச்சு இயங்கும் வழிகளான,இடகலை.பிங்கலை இரண்டையும் குறிக்கும்.

மூத்தான் இறைக்க என்பது ,இடகலை வழியாக(சந்திரகலை) மூச்சை வெளி விடுவதையும்,இளையான் படுத்த என்பது பிங்கலை(சூரியகலை) வழியாக மூச்சை உள்ளிழுப்பதையும் குறிக்கும்.

சாதாரணமாக மூச்சு அவ்வாறுதான் இயங்குகிறது.இதனால் சக்தி வீணாகிறது. பயனின்றிப் போகிறது.அவ்வாறன்றி.இவ்விரு கலைகளும் சமமாகப் பங்கேற்குமாறு, மூச்சு நடு நாடியாகிய சுழு முனையில் இயங்கினால்,ஞானமாகிய ஒளி பிறக்கும்.

கூத்தி வளர்த்ததோர் கோழிப் புள்ளாமே என்பதைப் பலவிதமாப் பலர் பொருள் கொண்டாலும்,அடிப்படைக் கருத்து அங்கு ஒன்றுதான்.-பயனின்றிப் போவது.

வேறு ஒரு உரையில் வேறு விதமாகவும் பொருள் கொள்ளப் பட்டுள்ளது.

ஏற்றம் இரண்டுள என்பது புண்ணிய பாவங்களைக் குறிப்பதாகவும்,ஏழு துரவுள என்பது சீவன் விரும்பும்  ஏழு தோற்றங்களைக் --உடல்,மனம், தனம்,ராச்சியம்,உலகம்,உயர்வு ,சேவகம்--  குறிக்கும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.இந்த ஏழு ஆசைகளில் அல்லல்பட்டு  மாயையில்  உழலும் சீவனுக்கு உடையாளி யாரும் இல்லை, கணிகையின் மகனை யாரும் உடமை கொள்ளாதது போல் .

பஞ்சாட்சர தீப உரை விதமாகப் பொருள் கொள்கிறது.உயிர்ப்பின் செயலை நெறிப்படுத்தும் மூக்குத் துளைகளாகிய இரண்டு ஏற்றங்கள் உள்ளன.உடம்பின் ஆற்றல் குவிந்துள்ள கிணறுகள் ஏழுள்ளன.மூத்தவனாய ஆங்காரம் என்னும் தத்துவம் அம்மூச்சை நடத்துகிறது.அவ்வாங்காரத்தினின்று தோன்றிய மனம் விழைவு வடிவத்தில் நின்று  அம்மூச்சுப் பயனை உலக விடயங்களில் சேர்ப்பிக்கின்றதுஇதனால் பெற வரும் நீர் போன்ற உயிர்ப்பு ஆற்றல்பயனை வளர்த்துகொள்ள உதவாமல் வீணே செலவாகின்றது.
  



Thursday, July 21, 2011

சூனிய சம்பாஷணை-வாழ்க்கைச் சூதாட்டம்

கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பின் மீண்டும் வருகிறேன்.

கடைசிப் பதிவின் தேதி 29-03-2011.

ஏன் இத்தனை பெரிய இடைவெளி என யோசித்துப் பார்க்கிறேன்.

தனியாகக் காரணம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

நான் எழுதவில்லை என்றால் அதற்குக் காரணம் அவன் என்னை எழுத வைக்கவில்லை.

எதையும் செய்ய வைப்பவன் அவன்.செய்யாமல் இருக்க வைப்பவனும் அவனே!

இந்த வாழ்க்கைச் சூதாட்டத்தில்,என் உயிர் ஒரு ஆட்டக்காரன் என்றால் மறைந்திருந்து ஆடும் மற்ற ஆட்டக் காரன் அவன்தானே!

திருமூலர் சொல்கிறார்—

“காயம் பலகை கவறைந்து கண்மூன்றா
ஆயம் பொருவதோர் ஐம்பத்தோ ரக்கரம்
ஏய பெருமா னிருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப்பறி யேனே”

இதன் பொருள்--

மனித வாழ்க்கை ஒரு பகடை ஆட்டம் போன்றது.இதில் நம் உடல் சூதாட்டப் பலகை. ஐம்புலன்களும் பகடைகள்.முக்குணங்களும் இருந்தாடும் இடங்கள். ஐம்பத்தோரு அக்ஷரங்களும் சூதாட்டப் பலகையின் கட்டங்கள்.இந்த ஆட்டத்தின் நிகழ்வுகளை முடிவு செய்பவன் அவன்.எப்படிப் பகடைகள் போடப் படுகின்றன ,ஆட்டம் எப்படி நடைபெறுகிறது என்பது புரிந்து கொள்ள முடியாத புதிர்.

இங்கு கண் மூன்று என்பதற்கு முக்குணங்களை மட்டும் குறிக்காமல் வேறு பொருள்களையும் குறிப்பதாகக் கொள்வர்.—1)மனம்,புத்தி,அகங்காரம்2)புருவ நடு,கழுத்து, இதயம்(நனவு,கனவு,உறக்கம்) 3)இச்சா,கிரியா,ஞான சக்திகள் 4)அநாகதம்,விசுத்தி,ஆக்ஞா சக்கரங்கள் 5)பைசந்தி,மத்தியமா,வைகரி ஆகிய சப்த நிலைகள்.

(மனதில் ஒட்டும் எண்ணங்களை வாக்கியமாக்கி வெளிக் கொணர்தல் தூல வைகரி எனவும்,வெளியில் சொல்லாமல் மனதுக்குள் இருத்தும்போது அது சூக்கும வைகரி எனவும் சொல்லப்படும்.
சொல் வடிவம் பெறாத ஒரு எண்ணக் கரு, மத்தியமா எனப்படும்.இதை யோக நூல்கள் மயில் முட்டைக்கு ஒப்பிடும்.முட்டையினுள்ளே இருக்கும் கருதான் மயிலாக உருவாகிறது.எனவே வைகரி மயில்;மத்தியமா முட்டை.

இதற்கும் அடிப்படையான,எண்ணம் கருவாவதற்கு முந்தைய நிலையே பைசந்தி.)

”கவறைந்து” என்பது ஐம்புலன்களைக் குறிக்கும்.கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந் திரியங்கள் ஐந்து.(ஞானேந்திரியங்கள் என்பவை, மெய், வாய், கண், மூக்கு, செவி; கர்மேந்திரியங்கள் பாணி, பாதம்,வாக்கு,பாயுரு,உபஸ்தம்-கை, கால், வாய், எருவாய், கருவாய்)

”மறைப்பறியேனே” என்பது எவ்வாறெனில்,சீவன்,சிவன் இரண்டு ஆட்டக் காரர்களில்,சிவன் மறைந்து ஆடுகிறார்.அவர் சீவனுக்குச் சாதகமாக ஆடுகிறாரா அல்லது பாதகமாக ஆடுகிறாரா என்பது தெரிவதில்லை.எனவே சீவனுக் குள்ளேயே மறைந்துள்ள சிவனை சீவன் அறிந்து கொண்டு,சலனமற்று இருத்தல் வேண்டும்(சீவன் என்ன சிவன் என்ன வேறில்லை).ஆட்டத்தின் வெற்றி தோல்விகளால் பாதிக்கப் படாமல் இருக்கும் ஒரு நிலையே அது.சீவன் சிவனை அறிந்துகொள்ளும்போது சீவனும் சிவனும் ஒன்றாகின்றனர்.

Tuesday, March 29, 2011

சூனிய சம்பாஷணை-பார்ப்பான் அகத்திலே

ஓர் ஊரில் ஒரு அந்தணன் இருந்தான்.அவனிடம் ஐந்து கறவைப் பசுக்கள் இருந்தன.நல்ல உயர்ந்த ரகப் பசுக்கள்.நன்கு,அதிகமாகப் பால் தரக்கூடிய பசுக்கள்.ஆனால் அப் பசுக்களை மேய்ப்பதற்கு எந்த விதமான எற்பாடும் அவன் செய்யவில்லை.அப்பசுக்கள் தம் மனம் போல தினமும் எங்கெங்கோ மேய்ந்து திரிந்து பாலைச் சொரிந்து விட்டு வீடு திரும்பி வந்தன . அப்பசுக்களின் பயன் அதன் உரிமையாளனுக்குக் கிடைக்காமல் போயிற்று. அப்பசுக்களைச் சரியான முறையில் தினமும் மேய்ப்பதற்கு அவன் ஏற்பாடு செய்திருந்தால் நல்ல பயன் அடைந்திருப்பான்.அந்தப் பசுக்கள் ஐந்தும் பாலாய்ச் சொரிந்திருக்கும்.

"பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரு முண்டாய் வெறியு மடங்கினால்
பார்ப்பான் பசுவைந்தும் பாலாச் சொரியுமே"--(திருமந்திரம்-2882)

ஆன்மா என்ற பார்ப்பானின் உடலில் ஐம் பொறிகளான கறைவைப் பசுக்கள் ஐந்து உள்ளன.-மெய்,வாய்,கண்,மூக்கு,செவி.அவை மேய்ப்பவர் இன்றி விருப்பம் போல் திரிவன.(புலன்கள் அடக்கப் படாமல் இன்பம் தேடி அலைகின்றன.)புலன் நுகர் பொருட்கள் மீதுள்ள ஆசையை அறுத்து இறைவன் பால் மனத்தைச் செலுத்தினால் பொறிகள் என்ற பசுக்கள் பேரின்பம் என்ற பாலைத் தரும்.

புலனடக்கம் என்பது என்ன?புலன்களின் இயற்கையான இயக்கத்தைக் கட்டுப்படுத்தி நிறுத்துவதா?அவ்வாறு அவற்றை அடக்கியே வைத்திருந்தால், அவை வீறு கொண்டு எழும்போது அவற்றைக் கட்டுப் படுத்த முடியாது போகும்.எனவே அவற்றை நெறிப் படுத்த வேண்டும்.இதையே பிரத்தியாகாரம் என்று சொல்வர். எனவே’மேய்ப்பாருமுண்டாய் வெறியுமடங்கினால்’ என்பதற்கு,அடக்கி நிறுத்துவது எனப் பொருள் கொள்ளாமல்,நன்னெறிப் படுத்துவது என்றே கொள்ளல் வேண்டும் .ஏனெனில்,திருமூலரே மற்றோர் இடத்தில் கூறுகிறார்---

“அஞ்சும் அடக்கு,அடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கு இல்லை;
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே."

மற்றொரு பாடலில் சொல்கிறார்—

“தானே புலன் ஐந்துந் தன்வச மாயிடும்
தானே புலன் ஐந்துந் தன்வசம் போயிடும்
தானே புலன் ஐந்துந் தன்னில் மடைமாறும்
தானேதனித்தெம் பிரான்தனைச் சந்தித்தே”

இறைவனைச் சரணடைந்தால்,ஐந்து புலன்கள் வழியே செல்லும் மனம்,அவன் வசப்படும்.அப்போது ஐம்புலன்களின் சுவை கெடும்.அந்த ஐம்புலன்களே ஆன்மாவை இறைவழி இட்டுச்செல்லும்.

பார்ப்பான் என்பதற்கு பிரம்மா என்றும்,அகம் என்பது அவன் படைத்த உடல் என்றும் பொருள் கொள்வர்.

அந்தணன் ஒருவனிடம் பசு இருந்தால் அவன் மேய்க்க இயலாதவன்.அதற்கென ஒரு மேய்ப்பவனின் உதவி நாட வேண்டும்.அவ்வாறு செய்யாவிடில் பசுக்கள் இருந்தும் அவனுக்குப் பயனில்லை என்பதால், பார்ப்பான் என்று சொல்லப் பட்டது என்றும் சொல்வர்.

"சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு."-

என்ற திருக்குறள் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.