Wednesday, November 20, 2013

இறைவனின் இயல்புகள்!



நீண்ட நாட்களாக பயணம் சென்றிருந்த  ஞானி அன்றுதான் திரும்பி வந்திருந்தார்.அவர் முன் ஊர் மக்கள் காத்திருந்தனர்.தன் பயம் பற்றியெல்லாம் ஞானி விரிவாக எடுத்துச் சொன்னார். பல கோவில்களுக்குச் சென்ற அனுபவத்தை விவரித்தார்.

ஒருவன் கேட்டான்”ஸ்வாமி!இறைவன் என்பவன் ஒருவனா?இருவரா?பல பேரா? விளக்குங்கள்” என்றான்.

ஞானி விளக்க ஆரம்பித்தார்......

திருமந்திரத்தின் முதல் பாடல் சிவம் பற்றி அழகாகச் சொல்கிறது.பாடலை முதலில் சொல்கிறேன் கேளுங்கள்..

“ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
 நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
 வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
 சென்றனன் தானிருந் தானுர்ணந் தெட்டே”

சிவம் ஒன்றாகவும்,அவனும் அவனுடைய இன்னருளும் என இரண்டாகவும்,அயன்,அரி,அரன் என மூன்றாகவும்,நான்கு நிலைகளாக உணரப் பெற்றும் ஐம்பொறிகளை வென்றும்,
அறுவகைச் சமயத்தோர்க்கும் அவ்வவர் பொருளாய்,ஆறாதாரங்களைக் கடந்தும்,
ஏழாவதாகிய துவாத சாந்தப் பெருவெளியில் சென்றும் அட்டமூர்த்திச் சொருபமாய் உணரப் பெற்றவர்.

ஒன்று என்று சொன்னால் அது என வரவேண்டும்.அல்லது ஒருவன் அவன் என வரவேண்டும். அவ்வாறில்லாமல் ஏன் ஒன்றவன்தானே எனச் சொன்னார் ?

அவன் உயர் திணை அஃறிணைப் பொருள்கள் அனைத்திலும் கலந்து அனைத்தையும் கடந்து இருப்பவன்.ஞானசம்பந்தர் கூறுவார்”எல்லாத் த்துவங்களையும் கடந்து வாக்கு மதிட்கு எட்டாமலிருந்துள்ள தற்சொரூபம்” என்ரு

இரண்டு என்றது அவனும் அவனது அருளுமென இரண்டு.தன்னிலிருந்து அருளைப் பிரித்து அதற்குச் சக்தியெனப் பெயர் அமைத்து இரண்டாயினன்.

மூன்று என்றதுபலவகையாகப் பொருள் கொள்ளப்படலாம்.படைத்தல்(பிரம்மா) காத்தல்
(விஷ்ணு) அழித்தல்(ருத்திரன்),என்றோ ஆன்மா, சிவம்,சக்தி என்றோ,அவன்,அவள்,அது என்றோ சாத்வீகம், ராஜசம்,தாமசம் ஆகிய முக்குணங்களையோ ,பதி,பசு,பாசம்  என்பவற்
றையோ,இச்சா சக்தி,கிரியா சக்தி,ஞான சக்திகளையோ குறிப்பதாக்கொள்ளலாம்.

நான்கு என்பது நான்கு வேதங்களையோ,சரியை,கிரியை,யோகம்,ஞானம் ஆகிய நான்கு அனுபவங்களையோ குறிப்பதாக கொள்ளலாம்.இதையே வேறு விதமாகவும் கொள்ளலாம். விசுவாதிகன்,விசுவ காரணன்,அந்தர்யாமி,விசுவரூபி என நான்காக உணரப் படுபவர்.

ஐந்து என்பது,ஐந்து புலன்களையோ,ஆக்கல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் ஆகிய செயல்களையோ குறிப்பதாக் கொள்ளலாம்.

ஆறு என்பது  மூலாதாரம்,சுவாதிட்டானம்,மணிபூரகம்,அநாகதம்,விசுத்தி,ஆக்கினை,ஆகிய ஆறு ஆதாரங்களைக் குறிப்பதாகவோ,(இவற்றுக்கான மூர்த்தி சொரூபங்கள் விநாயகர், பிரமன், திருமால்,ருத்திரன்,மகேசுவரன்,சதாசிவன்) மந்திரம்,பதம்,வண்ணம், கலை, புவனம், தத்துவம் ஆகிய ஆறு அத்துவாக்கள் எனவும் கொள்ளலாம்.

ஏழு என்பது ஆறாதாரங்களைக் கடந்த சஹஸ்ராரமாகவோ, ஏழுமேல் உலகம் ,ஏழு கீழ் உலகம் ஆகியவற்றையோ கொள்ளலாம்.

எட்டு உணர்ந்தான் என்பது,நிலம்,நீர்,நெருப்பு,காற்று ஆகாயம்,சூரியன்,சந்திரன்,சீவன் ஆகிய வற்றைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.தமிழில் ’அ’ என்பது எட்டைக் குறிக்கும்.எனவே அவன் அகரமாக உணரப் பெற்றவன் எனவும் கொள்ளலாம்.(அகர,உகர,மகரச் சேர்க்கையே ’ஓம்’)

எவ்வாறு நோக்கினும் இறைவன் ஒருவனே!அவன் தோற்றம் பல!



Monday, August 19, 2013

திருமந்திரம்-சூனிய சம்பாஷணை--”வழுதலை வித்திட......”

நேற்று வலைப் பதிவுகளில் மேய்ந்து கொண்டிருந்தபோது,ஒரு பதிவின் தலைப்பு,என்னை நிறுத்தியது.தலைப்பு-”திருமந்திரம்”;பதிவர் கோவை கார்த்திகேயன்.

என் தலையில் பித்தன்,முக்கண்ணன்,சொக்கன் ஓங்கிக் குட்டியது போல் உணர்ந்தேன்.பல மாதங்களாகத் திருமந்திர இடுகைகள் ஏதும் எழுதவில்லையே என சில நாட்களாக ஒரு உறுத்தல்;பிரதோஷ தினமாகிய நேற்று,சிவனே முன் வந்து எனக்குக் கட்டளையிட்டு விட்டான்.

பித்தனே(சென்னை அல்ல!.பித்தா,பிறைசூடி எனச் சுந்தரர் பாடியவர்) உன் கட்டளையை ஏற்றுத் திருமந்திரப்பதிவுகளை தொடர எண்ணுகிறேன்,அருள் புரி!

பித்தனே(சென்னைதான்) சற்றே விலகியிரும் பிள்ளாய்,இச் சொக்கனுக்கு இடம் விட்டு!

சூனிய சம்பாஷணை பற்றிய முதல் பதிவை பிப்ரவரி 2011 இல் எழுதினேன்.இன்று அப்பதிவை ஓர் அறிமுகப் பதிவாக மீண்டும் தந்து விட்டுப் பின் மற்றப் பாடல்களைத் தொடர எண்ணம்.
இதோ............

.//.........திருமந்திரத்தின் ஒன்பதாவது தந்திரத்தில்,’சூனிய சம்பாஷணை என்று ஒரு
பகுதி உள்ளது.இதில் மொத்தம் எழுபது பாடல்கள் (மந்திரங்கள்) உள்ளன. எளிதில் பொருள் விளங்காத குறியீட்டு மொழியில் இப்பாடல்கள் அமைந்துள்ளன.

இம்மந்திரங்களின் கருத்து இதுதான் என்று வரையறுக்கமுடியாதபடி அவை அவரவர் அனுபவத்துக்குத் தக்க வெவ்வேறு பொருள்களைக் கொண்டுள்ளன. சூனியம் என்பது ஒன்றும் இல்லாதது.இங்கு இதுதான் பொருள் என்று வரையறுக்க முடியாத நிலையைக் குறிக்கிறது.சித்தர்களின் குறியீட்டு மொழி புரிவது கடினம்.இங்கு நான் புரிந்துகொண்டு எழுதுகிறேன் என்று சொன்னால் அது பொய்.அந்த அளவுக்குப் பக்குவமும் ஞானமும் எனக்கில்லை.பல உரைகளில் படித்ததை அடிப்படையாகக் கொண்டே இதை எழுதுகிறேன். இதைப் படிக்கும் உங்களுக்குப் புதிய கருத்துக்கள் தோன்றலாம்.வேறு சில விளக்கங்கள் படித்திருக்கலாம்.அவ்வாறெனில் தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

இங்கு நான் சில பாடல்களை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளேன்.ஒரு சிறிய முயற்சி.

மந்திரம்.2868.
வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது
தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே.

இதை அப்படியே பொருள் கொண்டால்தோட்டத்தில் புழுதியைத் தோண்டினேன். அக்குழியில் கத்தரிக்காய்(வழுதல்) விதை விதைத்தேன்.அதிலிருந்து பாகற்கொடி படர்ந்தது.அதில் பூசணி பூத்தது.அதைக் கண்ட,அங்கிருந்த தோட்டக் குடிகளெல்லாம் பயந்து,தம் சிறு தெய்வங்களைத் தொழுது கொண்டு ஓடினார்கள்.அதன் பின் அக்கொடி யில்  வாழைக்கனி முற்றிலுமாகப் பழுத்தது

நேரடியாகப் பார்த்தால் பொருளற்ற ஒரு பாடல்.ஆனால் அறிஞர்கள் இதன் கருத்தை அனுபவ பூர்வமாக விளக்கும்போது வியப்பாக இருக்கிறது. நடக்கமுடியாத ஒரு நிகழ்ச்சி மூலம் தத்துவங்கள் விளக்கப் படுகின்றன..

இங்கு தோட்டம் என்பது நமது உணர்வாகிய நெஞ்சக் கமலம். புழுதியைத் தோண்டுத லாவது,அவ்வுணர்வுகளைப் பயந்து வரும் தத்துவங்களின் இயல்பை ஆராய்ந்து காணுதல்.வழுதலை வித்திடல் என்பது ஐந்தெழுத்தை உள் ஊன்றி நிறுத்துதல்.பாகல் என்பது நிலையில்லாப் பொருள்களில் பற்றற்று இருத்தல்.பூசனி பூத்தது என்பது திருவருள் விளக்கம்.தோட்டக் குடிகள் என்பது நம் அஞ்ஞானம்.வாழை பழுத்தது என்பது இறை அருட்பேறு.

இதையே வேறு முறையில் காணும்போது இவ்வாறு கொள்ளப் படுகிறது...... வழுதலை வித்திடல்-குண்டலினி யோகப் பயிற்சி;பாகல் முளைத்தது-வைராக்கியம் கிடைத்தது;புழுதியைத் தோண்டினேன்-ஆன்மா பற்றிய தத்துவ விசாரம்;பூசனி பூத்தது-சிவ தத்துவத்தைத் தெரிந்து கொள்ளல்;தோட்டக் குடிகள் ஓடினர்-புலனுணர்வுகள் அகலுதல்;பழுத்தது வாழைக்கனி--சிவானுபவம் கிட்டல்.

குண்டலினி யோகமாவது,மூலாதரத்தில் உறங்கும் சக்தியை மேலேற்றி சஹஸ்ராரத்தை அடையச் செய்தல்......சிற்றின்பத்தில் செலவிடும் சுக்கிலத்தை மூலக்கனல் ஆக்கிப் புருவ மத்தியாகிய ஆக்ஞைக்கு ஏற்ற,அங்கு தோன்றும் அருட்சக்தி அருளால், தத்துவப் பிணிப்பு நீங்கி உணர்வுகள் தூய்மை அடைந்து, சஹஸ்ராரம் அடைகிறது.சீவ கரணங்கள்,சிவ கரணங்களாகி சிவானுபவம் விளைகிறது.

வேறு விதமாகச் சொன்னால்...வழுதல் என்பது துறவையும்,பாகல் என்பது உலக மறுப்பையும்,பூசனி என்பது சிவபெருமானையும், தோட்டக் குடிகள் என்பது, ஐம்புலன்களையும்,மும்மலங்களையும்,வாழை பழுத்தல் என்பது முத்தியையும் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்படுகிறது.

சித்தர்களின் கருத்தை யாரால் அறிந்து கொள்ள முடியும்? //
Top of Form