Thursday, July 21, 2011

சூனிய சம்பாஷணை-வாழ்க்கைச் சூதாட்டம்

கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பின் மீண்டும் வருகிறேன்.

கடைசிப் பதிவின் தேதி 29-03-2011.

ஏன் இத்தனை பெரிய இடைவெளி என யோசித்துப் பார்க்கிறேன்.

தனியாகக் காரணம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

நான் எழுதவில்லை என்றால் அதற்குக் காரணம் அவன் என்னை எழுத வைக்கவில்லை.

எதையும் செய்ய வைப்பவன் அவன்.செய்யாமல் இருக்க வைப்பவனும் அவனே!

இந்த வாழ்க்கைச் சூதாட்டத்தில்,என் உயிர் ஒரு ஆட்டக்காரன் என்றால் மறைந்திருந்து ஆடும் மற்ற ஆட்டக் காரன் அவன்தானே!

திருமூலர் சொல்கிறார்—

“காயம் பலகை கவறைந்து கண்மூன்றா
ஆயம் பொருவதோர் ஐம்பத்தோ ரக்கரம்
ஏய பெருமா னிருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப்பறி யேனே”

இதன் பொருள்--

மனித வாழ்க்கை ஒரு பகடை ஆட்டம் போன்றது.இதில் நம் உடல் சூதாட்டப் பலகை. ஐம்புலன்களும் பகடைகள்.முக்குணங்களும் இருந்தாடும் இடங்கள். ஐம்பத்தோரு அக்ஷரங்களும் சூதாட்டப் பலகையின் கட்டங்கள்.இந்த ஆட்டத்தின் நிகழ்வுகளை முடிவு செய்பவன் அவன்.எப்படிப் பகடைகள் போடப் படுகின்றன ,ஆட்டம் எப்படி நடைபெறுகிறது என்பது புரிந்து கொள்ள முடியாத புதிர்.

இங்கு கண் மூன்று என்பதற்கு முக்குணங்களை மட்டும் குறிக்காமல் வேறு பொருள்களையும் குறிப்பதாகக் கொள்வர்.—1)மனம்,புத்தி,அகங்காரம்2)புருவ நடு,கழுத்து, இதயம்(நனவு,கனவு,உறக்கம்) 3)இச்சா,கிரியா,ஞான சக்திகள் 4)அநாகதம்,விசுத்தி,ஆக்ஞா சக்கரங்கள் 5)பைசந்தி,மத்தியமா,வைகரி ஆகிய சப்த நிலைகள்.

(மனதில் ஒட்டும் எண்ணங்களை வாக்கியமாக்கி வெளிக் கொணர்தல் தூல வைகரி எனவும்,வெளியில் சொல்லாமல் மனதுக்குள் இருத்தும்போது அது சூக்கும வைகரி எனவும் சொல்லப்படும்.
சொல் வடிவம் பெறாத ஒரு எண்ணக் கரு, மத்தியமா எனப்படும்.இதை யோக நூல்கள் மயில் முட்டைக்கு ஒப்பிடும்.முட்டையினுள்ளே இருக்கும் கருதான் மயிலாக உருவாகிறது.எனவே வைகரி மயில்;மத்தியமா முட்டை.

இதற்கும் அடிப்படையான,எண்ணம் கருவாவதற்கு முந்தைய நிலையே பைசந்தி.)

”கவறைந்து” என்பது ஐம்புலன்களைக் குறிக்கும்.கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந் திரியங்கள் ஐந்து.(ஞானேந்திரியங்கள் என்பவை, மெய், வாய், கண், மூக்கு, செவி; கர்மேந்திரியங்கள் பாணி, பாதம்,வாக்கு,பாயுரு,உபஸ்தம்-கை, கால், வாய், எருவாய், கருவாய்)

”மறைப்பறியேனே” என்பது எவ்வாறெனில்,சீவன்,சிவன் இரண்டு ஆட்டக் காரர்களில்,சிவன் மறைந்து ஆடுகிறார்.அவர் சீவனுக்குச் சாதகமாக ஆடுகிறாரா அல்லது பாதகமாக ஆடுகிறாரா என்பது தெரிவதில்லை.எனவே சீவனுக் குள்ளேயே மறைந்துள்ள சிவனை சீவன் அறிந்து கொண்டு,சலனமற்று இருத்தல் வேண்டும்(சீவன் என்ன சிவன் என்ன வேறில்லை).ஆட்டத்தின் வெற்றி தோல்விகளால் பாதிக்கப் படாமல் இருக்கும் ஒரு நிலையே அது.சீவன் சிவனை அறிந்துகொள்ளும்போது சீவனும் சிவனும் ஒன்றாகின்றனர்.