Friday, August 17, 2007

ஞானம்

அவன் கொஞ்சம் கொஞ்சமாக தன் நடமாட்டத்தைக் குறைத்துக் கொண்டான்.உணவுக்காக ஊருக்குள் செல்வது கூட குறைந்து போனது.அவனைத்தேடி அவன் இருப்பிடத்துக்கே உணவு வர ஆரம்பித்தது.மக்கள் அவன் தியானம் முடியும் வரை காத்திருந்து தங்கள் குறைகளை அவ்னிடம் சொல்ல ஆரம்பித்தனர்.அவனிடம் சொல்வதனாலேயே தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைப்பதாக நம்பினர்.அவனைச்சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் அவன் அருட்பார்வைக்காகக் காத்திருந்தது.அனைவரும் அவனுக்காகத் தின் பண்டங்களும்,பழங்களும் மற்ற உணவுப்பொருட்களும் கொண்டு வந்தனர்.அவன் அனைத்தையும் அங்கு வரும் அவர்களுக்கே பிரசாதமாகக் கொடுத்தான்.ஒரு நாய் உணவுக்காக அங்கு வந்து அவன் தரும் உணவைச்சாப்பிட்டு விட்டு அங்கேயே கிடக்க ஆரம்பித்தது.என்றாவது அந்த நாய் எங்காவது சென்று விட்டு திரும்புவதற்கு நேரமானால் அவன் கவலைப்பட ஆரம்பித்தான்.அவனையும் அறியாமலே அந்த நாயின் மீது அன்பு அதிகமாயிற்று.ஒரு நாள் காலை அவன் கண் விழித்தபோது அந்த நாய் இறந்து கிடக்கக் கண்டான்.துக்கம் மேலிடக்கண்ணீர் பெருக்கினான்.சிறிது நேரம் கழித்து துக்கம் குறைய அவன் யோசித்தான்"ஏனிந்தத் துக்கம் ?எதற்காக அழுதேன்? யாருக்காக அழுதேன்?இதற்குக்காரணம் தேவையற்று நான் வைத்த ஆசை;பற்று.இதுவன்றோ மனிதர்களின் துன்பங்களுக்கெல்லாம் காரணம்?இனி இறைவனை நினைக்கும்போது கூட அவன் மீது ஆசையற்ற ஒரு நிலையே வேண்டும்."
அவன் ஞானியானான்.
"ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனொடாயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப் படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விட விட ஆனந்தமாமே."---(திருமூலர்)

No comments: