Friday, August 7, 2009
அம்மாவை வணங்காது உயர்வில்லயே !
ஸ்லோகம்-1
எனது தாயார் என்னைக் கர்ப்பத்தில் வைத்து ஒவ்வொரு நிமிஷமும் என்னைத் தாங்கும் போது பட்ட கஷ்டத்துக்கு நான் பிரதியுபகாரம் ஏதாவது செய்திருக்கிறேனா?
அது இருக்கட்டும்.பிரசவ சமயத்தில்,போக்க முடியாததும்,பொறுத்துக் கொள்ள முடியாததுமான சூலைவலி என்கிற கொடுமையான ஒரு வலிக்கு நான் பதில் உபகாரம் செய்திருக்கிறேனா?
அதுவுமிருக்கட்டும்.என்னைப் பெற்றதும்,என்னை ரட்சிக்க ருசியில்லாத பொருட்களைச் சாப்பிட்டு வாழ்ந்த என் தாய்க்கு ஏதாவது செய்திருக்கிறேனா?
தனது உடலை இளைக்கச் செய்தும்,தூக்கமில்லாமலும்,எனது மலத்திலேயே படுத்து ஓராண்டு என்னை காத்த தாயாருக்கு ஏதாவது செய்திருக்கிறேனா?
யாராலும் தாய்க்குப் பிரதியுபகாரம் செய்ய முடியாது.எனவே அம்மா, உனக்கு நமஸ்காரம் செய்கின்றேன்,ஏற்றுக்கொள்.
ஸ்லோகம்-2
நான் கல்வி கற்கச் சென்றிருந்த சமயம்,தன்னை மறந்து தூங்கிய தாங்கள் நான் சன்னியாசியானதுபோல் கனவு கண்டு,அழுதவண்ணமாய் குருகுலம் வந்து கதறி,அங்கிருந்த எல்லோரையும் கதறி அழச்செய்த என் அம்மா,உனக்கு நமஸ்காரம்.
ஸ்லோகம்-3
அம்மா! நீ முக்தியடையும் சமயத்தில் கொஞ்சம் நீராவது உன் வாயில் விட்டேனா?பிறகும் ச்வதா மந்திரத்தினால் ச்ராத்தம்,தர்ப்பணமாவது செய்தேனா?உனது முக்தி சமயத்தில் தாரக மந்திரமாவது உன் காதில் ஓதினேனா?அச்சமயம் எனக்குக் கிடைக்காமலும்,எதுவும் செய்ய அதிகாரமில்லாததாலும்,சன்னியாசியானதால் எந்த வைதீகமும் கடைப் பிடிக்க முடியாது போனதால்,மனம் தவிக்கின்ற உன் மகனான என்னிடம் தயவு செய்ய வேண்டுமம்மா!உனது சரண கமலத்தைப் பிடித்து வேண்டுகிறேன்.
ஸ்லோகம்-4
அம்மா! என்னைக் காணும்போதெல்லாம் என் முத்தே கண்ணே,ராஜா, சிரஞ்சீவியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி,என்னிடம் கருணை, அன்பு, தயைகலந்த அமுதமான சொற்களால் என்னைச் சீராட்டி,,பாலூட்டி,தாலாட்டி வளர்த்த என் அன்னைக்கா வேகாத அரிசியை வாயிலே சமர்ப்பிப்பேன்?இதைப் பொறுக்க முடியவில்லையே! அம்மா நீயே சரண்.
ஸ்லோகம்-5
அம்மா,என்னைப் பெற்றபோது பொறுக்க முடியாத வேதனையுடன் அம்மா!அப்பா!சிவபெருமானே!கிருஷ்ணா!கோவிந்தா,ஹரே முகுந்தா என்றழைத்த வாக்கோடு கூடிய என் கருணைத் தெய்வமே!என் இரு கைகளையும் தூக்கி உனக்கு அஞ்சலி செய்து,உன்னைச் சரணடைகிறேன்.
Tuesday, July 7, 2009
குரு பூர்ணிமா
இன்று குரு பூர்ணிமா.வியாச பூர்ணிமா என்றும் அழைக்கப்படும் தினம்.இன்று நமது குருவுக்கு நன்றி தெரிவித்து அவருக்கு மரியாதை செய்தல் வேண்டும்.
ஒருவருக்கு நல்ல குரு வாய்ப்பதும் அந்தச் சிவகுரு அருளே.
எல்லோரும் பால் பிரண்டன் போல் அதிர்ஷ்டசாலிகள் அல்ல.அவர் தம் குருவைத்தேடும் காலத்துக் காஞ்சி மகாப் பெரியவரே உன் குரு திருவண்ணாமலையில் இருக்கிறார் என்று ரமண மகரிஷியிடம் அனுப்பி வைத்தார்.
இன்றைய அவசர வாழ்க்கையில்,இன்ஸ்டண்ட் காஃபி போல்,உடனடியாக ஆன்மிக முன்னேற்றம் எற்பட உதவக் கூடிய குருவாகத்தேடிப் பிடித்து,அவரிடம் சரண் அடைகிறோம்.அவர் நமது உண்மையான ஆன்மிக முன்னேற்றத்துக்கு உதவக்கூடியவரா,சரியான பாதையில் நம்மை நடத்திச் செல்லகூடியவரா என ஆராயாமல் கவர்ச்சியில் மயங்கி விடுகிறோம்.அதன் பலன்---?
திருமூலர் சொல்கிறார் கேளுங்கள்.
“குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே”
எளிதாகப் புரிகிறதல்லவா?
Thursday, March 5, 2009
அட்டாங்க யோகம்
ஸ்வாமி ஓம்கார் அவர்கள் தமது பதிவில் ‘அட்டாங்க யோகம்’ பற்றி மிக எளிய முறையில் அனைவருக்கும் புரியும்படி விளக்கியுள்ளார்கள்.அதைப் படித்ததும் திருமூலர் அட்டாங்க யோகம் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்த்தேன்.திரு மந்திரத்தில் சொல்லப்பட்ட சில கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
“இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே.”
இயமம்,நியமம்,கணக்கற்ற ஆதனம்,நலம் தரும் பிராணாயாமம், பிரத்தியாகாரம்,வெற்றி மிகுந்த தாரணை,தியானம்,சமாதி ஆகியவை பிறப்பறுக்கும் வாயிலாகிய ஞானத்தைப் பயக்கும்.
இயமம்
புலன்களினால் விளையும் இன்பம் நிலையற்றெதென உணர்ந்து,தீயவற்றில் மனம் செல்லாது கட்டுப் படுத்துதல்.
“கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லானியமத் திடையில்நின் றானே.”
ஓருயிரையும் கொல்லாதவன்,பொய் சொல்லாதவன், திருடாதவன், பிறரால் மதிக்கப்படும் குணம் உடையவன், நல்லவன், அடக்கமுடையவன்,நடுநிலை தவறாதவன், பகிர்ந்துண்பவன்,குற்றமற்றவன்,கள்ளுண்ணாதவன்,காமம் இல்லாதவன், ஆகிய இந்த இலக்கணக்கங்கள் உடையவனே இயமத்தான்.
இது போலவே ஹடயோகப் பிரதீபிகையும் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
“அஹிம்சா,சத்யமஸ்தேயம்,ப்ரம்மசர்யம்,க்ஷமா,தூதி:
தயார்ஜவம்,மிதாஹார:,சௌசம்,சைவ யமா தச.”
கொல்லாமை, வாய்மை,கள்ளாமை,காமமின்மை, பொறையுடமை உறுதியுடமை,தயை,நேர்மை,குறைவாக உண்ணல்,தூய்மை இப்பத்தும் இயமம்.
நியமம்
விதிமுறைகளை வழுவாதொழுகுதல்.
“தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ்
சிவன்றன் விரதமே சித்தாந்தக்- கேள்வி
மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீ ரைந்து
நிவம்பல செய்யின் நியமத்தனாமே.”
நியமத்தினை மேற்கொள்பவன்,தவம்,செபம்,மகிழ்ச்சி, தெய்வநம்பிக்கை,கொடை,முப்பொருள் உண்மை கேட்டல்,வேள்வி,சிவபூசை,ஒளி பொருந்திய சிவஞானமெனக் கூறப்பட்ட பத்தையும் உயர்வாய்க் கடைப் பிடிக்க வேண்டும்.
(முப்பொருள்-பதி,பசு,பாசம்)
பிற பின்னர்
Wednesday, February 11, 2009
நான் கடவுள்(அஹம் பிரஹ்மாஸ்மி)
வேதாந்த வாக்கியங்கள் நான்கு, மகா வாக்கியங்கள் என்று அழைக்கப் படுகின்றன.வேதாந்தம் என்பது வேதத்தின் அந்தம்,முடிவு.இவையே உபநிடதங்கள்.
ஐதரேய உபநிடதத்தில் காணப்படும் வாக்கியம்-”பிரஞ்ஞானம் பிரம்ம” என்பது.
பிருகதாரண்ய உபநிடதத்தில்காணப்படும் வாக்கியம்-”அஹம் பிரஹ்மாஸ்மி(பிரம்மைவாஹம் அஸ்மி)” என்பது.
சாந்தோக்கிய உபநிடதத்தில் சொல்லப்படும் வாக்கியம்-”தத்துவம் அஸி” என்பது.
மாண்டூக்ய உபநிடத்தில் வரும் வாக்கியம்-”அயமாத்மா பிரஹ்ம” என்பது.
எளிய முறையில் பொருள் சொன்னால்- 1)மெய்யுணர்வே பிரம்மம்(கடவுள்) 2)நான் கடவுள் 3)நீ அதுவாக இருக்கிறாய். 4)இந்த ஆத்மா பிரம்மன்.
இவை அனைத்தும் ஒரே பொருளையே உணர்த்துவன. நமக்குள்ளேயே கடவுள் இருப்பதை குறிக்கின்றன.
குரு சீடனுக்கு உணர்த்துகிறர்-த்வம்(நீ),தத்(அது),அஸி (இருக்கிறாய்).
இதை சீடன் உணர்ந்த நிலைதான் –அஹம் பிரஹ்மாஸ்மி.
தற்சமயம் மிகவும் பிரபலமாக இருக்கும் வாக்கியம்.
தன்னுள் இருக்கும் சிவனை உணரும்போது இந்த சீவன் சிவனாகிறான்.அதுவே அத்வைதம். இது பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார்? இதோ ஒரு மீள் பதிவு- இரண்டல்ல(அத்வைதம்)
அவன் மிகவும் களைத்திருந்தான்.பல நாட்களாய் அலைந்து உடலும் தேடலுக்கு விடை கிடைக்காமல் மனமும் சோர்ந்திருந்தான்.கையில் பணமில்லாததால் இரண்டு நாட்களாக ஒன்றும் உண்ணாமல் துவண்டிருந்தான்.ஊர் ஊராய் ஒவ்வொரு கோவிலாய் இறைவனைத் தேடித் தேடி அலுத்திருந்தான்.அந்த ஊர் கோவிலில் தெய்வம் சக்தி நிறைந்தது, இந்த ஊர்க் கோவிலில் இறைவன் விசேடமானவர் என்றெல்லாம் ஒவ்வொருவர் சொல்வதையும் கேட்டு ஒவ்வொரு ஊராய் அலைந்து அவன் தேடும் கடவுளைக்காணாமல் ஏமாற்றம் அடைந்திருந்தான்.இப்போது அந்தக் கிராமத்தின் ஆள் அரவமற்ற ஆற்றங்கரைக் கோவில் வாசலில் பசியின் காரணமாக கண்கள் இருண்டு மயக்கமடைந்து கீழே விழுந்தான்.
தன் முகத்தில் விழுந்த நீரின் குளிர்ச்சியில் அவன் கண் விழித்தான்.எதிரே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.அரையில் ஒரு துண்டு,தலையில் முண்டாசு,கையில் ஒரு கோல்.சிறுவனைப்பார்த்த அவன் முனகினான்"பசி".சிறுவன் இடுப்பில் முடிந்து வைத்திருந்த சில பழங்களை அவனிடம் நீட்டினான்.பழங்களைத்தின்று சிறிது பசியாறிய அவன் சொன்னான்"கடவுள் மாதிரி வந்து காப்பாற்றி விட்டாயப்பா".சிறுவன் கேட்டான் "என்னங்க ஆச்சு?"அவன் சொன்னான்"கடவுளைத்தேடி ஊர் ஊராய் சுற்றினேன்.காண இயலவில்லை."
சிறுவன் சிரித்தான்"இப்பதான் என்னைப்பார்த்து கடவுள் மாதிரின்னு சொன்னீங்க.அப்ப எங்கிட்ட கடவுள் இருந்தா ,எல்லார் கிட்டயும் இருக்கணும்,உங்க கிட்டயும் இருக்கணும்.ஆனால் கடவுளைத்தேடி ஊரெல்லாம் அலஞ்சேனு சொல்றீங்களே.சிரிப்புதான் வருது சாமி"
அவனுக்குப் பளார் என்று அறைந்தது போல் இருந்தது.கண்களை மூடித்திறந்தான்.சிறுவனைக் காணவில்லை.உண்மை உணர்ந்தான்.தான் வேறு கடவுள் வேறில்லை என்பதை உணர்ந்தான்.பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி புலன்களைக்குவித்து உள்ளே இருக்கும் கடவுளோடு ஒன்றினான்."அஹம் ப்ரம்ஹாஸ்மி"
"சீவன் என்ன சிவனார் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரைஅறிகிலர்
சிவனார் சிவனாரைஅறிந்த பின்
சீவனார் சிவனாயிட்டிருப்பரே"-(திருமூலர்)
Wednesday, December 17, 2008
மருந்தீசன் பதிகம்
மருந்தீசன் பதிகம்
வேத மேஅ றிந்தி லாமெய் ஞான ரூப மானவன்
ஓத மாக்க டல்பு ரத்து ஔட தீசன் பால்வண
நாதன் நாதன் வான்மி யூரன் நல்ல டிக்கு வந்தனம் 1
எல்லை யற்ற சோதி யாய் அ கண்ட மெங்கும் நிற்பவன்
பல்லு யிர்க்கு ளேயும் அன்புப் பால மாய்ப் பிணைத்தவன்
சொல்ல வொண்ணா வான்மி யூரன் தூம லர்த்தாள் வந்தனம் 2
மாய்ந்த மன்ம தற்கு மீண்டும் வாழ்வு தந்த வள்ளலான்
ஆய்ந்த றிந்த ஞானி கட்கு அகத்து ளே நி றைந்தவன்
தேய்ந்த திங்கள் வான்மி யூரன் சேவ டிக்கு வந்தனம் 3
ஒன்றி ஆதி அற்ற வோர்அ னந்த மாய்ப்ப ரந்தவன்
அன்றி லாயெம் குற்றம் நீக்கி அன்பு மட்டும் ஏற்பவன்
நன்றி நன்றி வான்மி யூரன் நல்ல டிக்கு வந்தனம் 4
அருள் உ மைக்கி டம்ப கிர்ந்தே அம்மை யப்பன் ஆனவன்
இருள்ம லிந்த குகை நிகர்த்த எங்கள் நெஞ்சில் தீபமாய்
மருள் அ கற்றும் வான்மி யூரன் மலர டிக்கு வந்தனம் 5
அருள் உ மைக்கி டம்ப கிர்ந்தே அம்மை யப்பன் ஆனவன் :
(By sharing his physique with Parvathi, demonstrates that He Is Manifest as Matter and Energy in the Cosmos)
நீல கண்ட னான வன் வெண் ணீரணிந்த நின்மலன்
மால் அ யற்கும் காண்கி லாஅ நந்த மாய் அ மைந்தவன்
பால் அ ணிந்த வான்மி யூரன் பதம லர்க்கு வந்தனம் 6
வந்த தாலே உழலும் நந்தம் வாழ்வைச் சீர்ப்ப டுத்துவோன்
இந்தி ரன்,பி ருங்கி, காலன், ஏனை தேவர், நான்மறை
வந்த னஞ்செய் வான்மி யூரன் மலர்ப்ப தங்கள் வந்தனம் 7
கந்த வேளை நெற்றிக் கண்ணின் கனலி ருந்து யிர்த்தவன்
சுந்த ரர்க்குத் தோழன் எங்கும் சோதி யாய் நி றைந்தவன்
எந்தன் ஈசன் வான்மி யூரன் இணைய டிக்கு வந்தனம் 8
இன்புடன் நடாத்தி பத்தர் ஈர டிக்குள் ஏற்றவன்
என்பும் ஓடும் மாலை யாக்கி யாக்கை அற்பம் காட்டுவோன்
தென்பு லத்து வான்மி யூரன் சேவ டிக்கு வந்தனம் 9
இன்புடன் நடாத்தி பத்தர் ஈர டிக்குள் ஏற்றவன் ::
(அறுபத்து மூன்று திருவிளையாடல்கள் அன்பருக்காக நடத்தினவன் )
பூத மைந்து மாகி யாளும் பூர ணத்தின் பூரணன்
நாத ரூபன் மூச்சி லேஓங் கார நாத மானவன்
வேத நாதன் பால்வ ணந்தன் மெய்ய டிக்கு வந்தனம் 10
சு. பட்டாபிராமன் மார்ச் ஏழு, 2003
--
Monday, September 1, 2008
செயல் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி-உபநிடத வழி.
ச்ரத்தா ஏவ சிர:
------------------
முதன்மையானது,அக்கறை.செய்யும் செயலை மதித்தல்;நேசித்தல்(சிர: என்றால் தலை.ச்ரத்தா என்பது ஈடுபாடு,அக்கறை). சிறப்பாகச் செயல் புரிய வேண்டுமெனில் செய்கின்ற செயலை வெறுப்புடன் செய்யக்கூடாது; தயக்கத்துடன் செய்யக் கூடாது;அரை மனதுடன் செய்யக்கூடாது.எல்லாச் செயல்களும் நாமே தேர்ந்தெடுத்துச் செய்பவை அல்ல.சில செயல்களை நாம் தேர்ந்தெடுத்துச் செய்கிறோம்.சில செயல்கள் நாம் ஏற்றுக்கொண்ட பாத்திரத்துக்கேற்ப செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.ஒரு குடும்பத்தலைவனாக,ஒரு அலுவலக ஊழியனாக,ஒரு பொறுப்புள்ள குடிமகனாகப் பல செயல்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவ்வாறு எந்தச்செயல் செய்தாலும் அதன் மீது விருப்பம் இருக்க வேண்டும்;குறைந்த பட்சம் வெறுப்பாவது இல்லாமல் இருக்க வேண்டும்."என் தலையெழுத்து,என் போதாதகாலம்" என்றெல்லாம் குறை கூறிக்கொண்டே எந்தச் செயலையும் செய்யக்கூடாது. செயலை விரும்பக் கற்றுக் கொள்ள வேண்டும்.நாம் செய்யும் செயல்களை விரும்பக் கற்றுக்கொண்டால், அச்செயலைச் செய்வதே நமக்கு மகிழ்ச்சியைத்தரும். ஒரு முறை அலுவலகத்தில் என்னைப் பார்க்க வந்த ஒரு நண்பர் என் செயல்பாடுகளைப் பார்த்து விட்டுக் கூறினார்"நான் நினைக்கிறேன்,நீங்கள் உங்கள் வேலையை மிகவும் நேசிக்கிறீர்கள் என்று".நான் சொன்னேன்"ஆம்,நண்பரே, அவ்வாறு நேசிப்பதால்தான் என்னால் சிறப்பாகச் செயலாற்ற முடிகிறது".எனவே முதன்மையானது செய்யும் செயலிடம் விருப்பம்,மரியாதை,ஈடுபாடு,அக்கறை.
ருதம் தக்ஷிண:பக்ஷ:
---------------------------
அடுத்தது செய்யும் செயல் பற்றிய அறிவு.செய்ய வேண்டிய செயலைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.எதைச் செய்ய வேண்டும்,எப்படிச் செய்ய வேண்டும்,ஏன் செய்ய வேண்டும்,எங்கு செய்ய வேண்டும்,எப்போது செய்ய வேண்டும் என்பவற்றை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும், 'ருதம்' என்பதற்குச் செய்கின்ற செயலைப்பற்றிய சரியான அறிவு எனப் பொருள் கொள்ளவேண்டும்."யதா சாஸ்திரம்,ததா கர்தவ்யம் ஞானம்" என்கிறார் ஆதி சங்கரர்.விதிகள் என்ன சொல்கின்றனவோ,அதை அப்படியே செய்ய வேண்டும். இரவில் ஒருவர் சுப்ரபாதம் படித்தால் அவரைப் பற்றி என்ன சொல்வது? தேர்வுக்குச் செல்லும் மாணவன் நன்கு படித்துவிட்டுச் செல்லவேண்டும்.எனக்குத் தெரிந்த ஒரு ஆசிரியர்,இருபது ஆண்டுகளாகப் பணியாற்றி வருபவர்,இன்றும் வகுப்புக்குச் செல்லும் முன் தயார் செய்து கொண்டுதான் செல்கிறார்.(ஈடுபாடு+அறிவு).ஒரு செயலில் ஒரு தவறு செய்தால் அதிலிருந்து கற்றுக்கொண்டு மீண்டும் அத்தவறைச் செய்யாமல் இருக்க வேண்டும்.அதுவே செயல் முன்னேற்றத்துக்கான வழி.
செயல்கள் மட்டுமன்று.வாழ்வில் நாம் ஏற்கும் ஒவ்வொரு பாத்தி்ரமுமே பல விதமான செயல்பாடுகள் உடையதாகிறது.ஒருவரே,மகனாய்,கணவனாய், சகோதரனாய்,தந்தையாய் பல நிலைப்பாடுகளில் செயல் புரிய வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் திறம்படச் செய்ய,அது பற்றி முழுமையான அறிவு தேவை.
ஸத்யம் உத்தர:பக்ஷ:
--------------------------
செய்யும் செயல் பற்றி முழுமையாக அறிந்த பின் அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
" யதா சாஸ்திரம் ததா கர்தவ்யம் ஞானம்
யதா ஞானம் ததா அனுஷ்டானம்."
எனக்கு ஒரு செயலை எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரியும்,ஆனால் செய்ய மாட்டேன் என்ற நிலை இருக்கக்கூடாது.அறிவுக்கும்,செயலுக்கும் இடையே பிளவு இருக்கக் கூடாது என்பதையே ஸத்யம் என்ற சொல் உணர்த்துகிறது.ஒரு செயல் பற்றிய நம் முழுமையான அறிவைப் பயன்படுத்தி அச் செயலைச் செய்யும்போது செம்மையாகச் செய்து விட்டோம் என்ற திருப்தி கிடைக்கிறது.எனவே மூன்றாவது,அறிந்தவற்றைச் செயல் படுத்துவது.
யோக ஆத்மா
-----------------
யோக என்பதற்கு இங்கே பொருள் ஒருமுகப்படுத்துதல்(concentration,focus).நாம் தியானத்தில் இருக்கும்போது நம் மனம் ஒருமுகப்படுகிறது. அதைப்போல, செயலைத் தியானமாகப் பாவித்துமனதை ஒரு முகப்படுத்திச் செய்யும்போது செயல் செம்மையாக முடிக்கப்படுகிறது.இயந்திரம் போல் செயலாற்றினால் செய்த செயலையே திரு்ம்பச் செய்ய நேரிடும்.அலுவலகம் சென்றால் நம் சிந்தனை அங்கு செய்கின்ற செயல்களின் மீதுதான் இருக்க வேண்டும். அவ்வாறின்றி, விட்டைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தால் செயல் எவ்வாறு செம்மையாக முடியும்?எனவே,நமது கடமைகளைச் செய்யும்போது,"கருமமே கண்ணாயினார்"என்பது போல,மனதை ஒரு முகப்படுத்திச் செய்ய வேண்டும்.
மஹ:புச்சம் ப்ரதிஷ்டா.
----------------------------
" நான் செய்யும் ஒவ்வொரு செயலுமெவ்வளவு அதிகமான மனிதர்களுக்குப் பயன் படுகிறதோ அவ்வளவு பயன் படட்டும்"என்று எண்ண வேண்டும். கென்னடி சொன்னார்"இந்த நாடு எனக்கு என்ன செய்தது என்று கேட்காதே,நான் இந்த நாட்டுக்கு என்ன செய்தேன் என்று கேள்"எனவே நமது பார்வையை விரிவடையச் செய்ய வேண்டும்.நமக்குக் கிடைக்கும் பயனை விட,அச் செயலால் மற்றவர்கள் எவ்வறு பயனடைகிறார்கள் என்பதை நினைக்க வேண்டும்.
ஆக, ஐந்து விதிகளாவன:-செயலை விரும்பு,அது பற்றி முழுமையாய் அறிந்து கொள்,செயல்படுத்து,ஒருமுகமாய் செயலாற்று,பார்வையை விரிவாக்கு.
இவையே தைத்திரீய உபநிடதம் சொல்லும் செய்தி.
(ஆதாரம்:பரம பூஜ்யஸ்ரீ ஸ்வாமி பரமார்த்தானந்தா அவர்களின் உரை)
Monday, July 28, 2008
ஒன்றே குலம்,ஒருவனே தேவன்.
"இறைவன் படைப்பில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை ஆறு விதமாக உயிர்கள் படைக்கப் பட்டிருக்கின்றன.கிடைத்தற்கரிய மனிதப் பிறவி எடுத்த நாம் ஆறறிவு உள்ளவர்களாகவா நடந்து கொள்கிறோம்?இம் மதங்களை, சாதிகளை,அதன் பிரிவுகளை,உட்பிரிவுகளை எல்லாம் இறைவனா படைத்தான்?மனிதனே இவற்றையெல்லாம் படைத்து விட்டுத் தான் படைத்த மதத்தின் பெயரால்,இறைவனை முன்னிறுத்திச் சண்டை, சச்சரவு , கலவரங்களில் ஈடுபடுவது அவன் வணங்கும் அந்த இறைவனையே அவமானப் படுத்தும் செயலல்லவா?இரண்டு மதங்களுக்குள்சண்டை,ஒரே மதத்தில் இரு சாதிகளுக்குள் சண்டை,ஒரே சாதிக்குள் உட்பிரிவுகளுக்குள் சண்டை இவையெல்லாம் அறிவற்ற செயலல்லவா?"
"அனைத்து உயிர்களுக்கும் இறைவன் ஒருவனே.மதங்களால் பிரிந்து வழிபாட்டு முறைகளால் மாறுபட்டாலும்,எல்லோரும் மனிதர்கள் என்னும் ஒரே குலமே.நமக்கு நன்மை நடக்க விரும்பும்போது அதன் காரணமாகப் பிறர்க்குத் தீமை விளைய எண்ணுதல் கூடாது.அவ்வாறு எண்ணுவதால், பகையும் போரும் மூண்டு உயிர்ச்சேதம் ஏற்படும் அல்லவா?எனவே நன்மையே நினைக்க வேண்டும்.தீய செயல் செய்வதற்குத்தான் வெட்கப் பட வேண்டும்.நல்லன எண்ணி நல்லன செய்பவர்கள் வெட்கப் பட ஏதும் இல்லை.எண்ணம்,சொல்,செயல் எல்லாம் நல்லவையாகவே இருக்கட்டும்.எந்த முறையில் வழி பட்டாலும்,பரம்பொருள் ஒருவனே என்பதை உணர்ந்து,அவனையே சிந்தையில் இருத்தி அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்தால் வாழ்க்கை இனியதாகவே இருக்கும்.உணருங்கள்"
ஞானியார் தியானத்தில் ஆழ்ந்தார்.
"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே"----(திருமூலர்)

