Tuesday, February 8, 2011

சூனிய சம்பாஷணை--கூறையுஞ்சோறும்.....

கூறையுஞ் சோறும் குழாயகத் தெண்ணையும்
காறையும் நாணும் வளையலுங் கண்டவர்
பாறையி லுற்ற பறக்கின்ற சீலைபோல்
ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே.----மந்திரம்.2893.

ஆடையும்,சோற்றினால் ஆய உடல் வனப்பும் ,குழலில் வைத்த எண்ணெயும், கழுத்தில் அணியும் காறையும், இடை நாணும்,கை வளையலுமாகியவற்றை அணிந்த பெண்ணைக் கண்டு மோகம் கொண்டவர்,பாறை மீது வைத்த ஆடை பறந்து அழுக்குக் குழியில் விழுவது போல்,காமம்,குரோதம்,லோபம்,மோகம், மதம்,மாற்சரியம் ஆகிய ஆறு உட்பகைகளால் கெடுவர்.

இங்கு ‘பாறையிலுற்ற பறக்கின்ற சீலை போல்’என்பதற்கு,பாறை மீது வைத்த ஆடை பறப்பது” என்று பொருள் கொள்ளப் படுகிறது.ஆனால்,இவ்வாறு அழகு படுத்தப் பட்ட பெண்,ஒரு கற்பாறைக்குப் புடவை சுற்றியது போல் இருக்கிறாள்;எவ்வாறு புடவை சுற்றிய கற்பாறை எந்த இன்பமும் கொடுக்காதோ,அதே போல் அந்தப் பெண்ணும் ஆன்மாவுக்கு இன்பம் தர மாட்டாள்,என்று மற்றொரு பொருளும் சொல்லப் படுகிறது.

ஆனால் சூனிய சம்பாஷணை என்ற தலைப்பில்,குறியீட்டு மொழி இல்லாமல் ஒரு பொருளைப் பற்றித் திருமூலர் சொல்வாரா?எனவே வேறு விதமாக யோசித்தால் தோன்றுவது---

கூறை எனபது,உடலைப் போர்த்திய தோல்.

சோறு என்பது சதை.(கத்தாழைக்குள் சோறு இருப்பது போல்)-

குழாயகத்தெண்ணை என்பது எலும்பு நரம்புகள்,குருதி-குழாய்-எலும்பு,நரம்பு;எண்ணெய்-குருதி

காறை,நாண் வளையல்-கழுத்து,இடை,கை போன்ற உடல் உறுப்புகள்.

மொத்தமாகக் குறிக்கப்படுவது.அழியும் இந்த உடல்.

இந்த உடலின் மேல் விசேட கவனம் செலுத்திப் போற்றிப் பாதுகாத்து, உடலில் உள்ள புலன்களின் மயக்கத்தால்,இந்த உடலிலுறை ஆன்மாவை மறப்பவர்கள், மீண்டும் பிறவிக் குழியில் வீழ்வர்!(ஆறைக்குழி என்பது பிறவிக் குழியைக் குறிக்கும் எனக் கொள்ளலாம்.) இது எனக்குத் தோன்றிய பொருள்.

திருக்குறளில் ’எச்சத்தால்’ என்பதை ‘மக்களால் என்று மாற்றிய பாதிரியார் போல் என் கருத்துத் தவறாகக் கூட இருக்கலாம்.ஆனால் சித்தர்களின் குறியீட்டு மொழியின் பொருளுக்கு எல்லை ஏது?

திருமூலர் என்ன நினைத்தாரோ!

Tuesday, February 1, 2011

சூனிய சம்பாஷணை-வழுதலை வித்திட...

திருமந்திரத்தின் ஒன்பதாவது தந்திரத்தில்,’சூனிய சம்பாஷணை
என்று ஒரு பகுதி உள்ளது.இதில் மொத்தம் எழுபது பாடல்கள் (மந்திரங்கள்) உள்ளன. எளிதில் பொருள் விளங்காத குறியீட்டு மொழியில் இப்பாடல்கள் அமைந்துள்ளன. இம்மந்திரங்களின் கருத்து இதுதான் என்று வரையறுக்கமுடியாதபடி அவை அவரவர் அனுபவத்துக்குத் தக்க வெவ்வேறு பொருள்களைக் கொண்டுள்ளன. சூனியம் என்பது ஒன்றும் இல்லாதது.இங்கு இதுதான் பொருள் என்று வரையறுக்க முடியாத நிலையைக் குறிக்கிறது.சித்தர்களின் குறியீட்டு மொழி புரிவது கடினம்.இங்கு நான் புரிந்துகொண்டு எழுதுகிறேன் என்று சொன்னால் அது பொய்.அந்த அளவுக்குப் பக்குவமும் ஞானமும் எனக்கில்லை.பல உரைகளில் படித்ததை அடிப்படையாகக் கொண்டே இதை எழுதுகிறேன். இதைப் படிக்கும் உங்களுக்குப் புதிய கருத்துக்கள் தோன்றலாம்.வேறு சில விளக்கங்கள் படித்திருக்கலாம்.அவ்வாறெனில் தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

இங்கு நான் சில பாடல்களை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளேன்.ஒரு சிறிய முயற்சி.
மந்திரம்.2868.
”வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது
தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே.”

இதை அப்படியே பொருள் கொண்டால்” தோட்டத்தில் புழுதியைத் தோண்டினேன்.அக்குழியில் கத்தரிக்காய்(வழுதல்) விதை விதைத்தேன்.அதிலிருந்து பாகற்கொடி படர்ந்தது.அதில் பூசணி பூத்தது.அதைக் கண்ட,அங்கிருந்த தோட்டக் குடிகளெல்லாம் பயந்து,தம் சிறு தெய்வங்களைத் தொழுது கொண்டு ஓடினார்கள்.அதன் பின் அக்கொடியில் வாழைக்கனி முற்றிலுமாகப் பழுத்தது”

நேரடியாகப் பார்த்தால் பொருளற்ற ஒரு பாடல்.ஆனால் அறிஞர்கள் இதன் கருத்தை அனுபவ பூர்வமாக விளக்கும்போது வியப்பாக இருக்கிறது. நடக்கமுடியாத ஒரு நிகழ்ச்சி மூலம் தத்துவங்கள் விளக்கப் படுகின்றன..

இங்கு தோட்டம் என்பது நமது உணர்வாகிய நெஞ்சக் கமலம். புழுதியைத் தோண்டுதலாவது,அவ்வுணர்வுகளைப் பயந்து வரும் தத்துவங்களின் இயல்பை ஆராய்ந்து காணுதல்.வழுதலை வித்திடல் என்பது ஐந்தெழுத்தை உள் ஊன்றி நிறுத்துதல்.பாகல் என்பது நிலையில்லாப் பொருள்களில் பற்றற்று இருத்தல்.பூசனி பூத்தது என்பது திருவருள் விளக்கம்.தோட்டக் குடிகள் என்பது நம் அஞ்ஞானம்.வாழை பழுத்தது என்பது இறை அருட்பேறு.

இதையே வேறு முறையில் காணும்போது இவ்வாறு கொள்ளப் படுகிறது...... வழுதலை வித்திடல்-குண்டலினி யோகப் பயிற்சி;பாகல் முளைத்தது-வைராக்கியம் கிடைத்தது;புழுதியைத் தோண்டினேன்-ஆன்மா பற்றிய தத்துவ விசாரம்;பூசனி பூத்தது-சிவ தத்துவத்தைத் தெரிந்து கொள்ளல்;தோட்டக் குடிகள் ஓடினர்-புலனுணர்வுகள் அகலுதல்;பழுத்தது வாழைக்கனி--சிவானுபவம் கிட்டல்.

குண்டலினி யோகமாவது,மூலாதரத்தில் உறங்கும் சக்தியை மேலேற்றி சஹஸ்ராரத்தை அடையச் செய்தல்......சிற்றின்பத்தில் செலவிடும் சுக்கிலத்தை மூலக்கனல் ஆக்கிப் புருவ மத்தியாகிய ஆக்ஞைக்கு ஏற்ற,அங்கு தோன்றும் அருட்சக்தி அருளால், தத்துவப் பிணிப்பு நீங்கி உணர்வுகள் தூய்மை அடைந்து, சஹஸ்ராரம் அடைகிறது.சீவ கரணங்கள்,சிவ கரணங்களாகி சிவானுபவம் விளைகிறது.

வேறு விதமாகச் சொன்னால்...வழுதல் என்பது துறவையும்,பாகல் என்பது உலக மறுப்பையும்,பூசனி என்பது சிவபெருமானையும், தோட்டக் குடிகள் என்பது,ஐம்புலன்களையும்,மும்மலங்களையும்,வாழை பழுத்தல் என்பது முத்தியையும் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்படுகிறது.

சித்தர்களின் கருத்தை யாரால் அறிந்து கொள்ள முடியும்?