இன்று குரு பூர்ணிமா.வியாச பூர்ணிமா என்றும் அழைக்கப்படும் தினம்.இன்று நமது குருவுக்கு நன்றி தெரிவித்து அவருக்கு மரியாதை செய்தல் வேண்டும்.
ஒருவருக்கு நல்ல குரு வாய்ப்பதும் அந்தச் சிவகுரு அருளே.
எல்லோரும் பால் பிரண்டன் போல் அதிர்ஷ்டசாலிகள் அல்ல.அவர் தம் குருவைத்தேடும் காலத்துக் காஞ்சி மகாப் பெரியவரே உன் குரு திருவண்ணாமலையில் இருக்கிறார் என்று ரமண மகரிஷியிடம் அனுப்பி வைத்தார்.
இன்றைய அவசர வாழ்க்கையில்,இன்ஸ்டண்ட் காஃபி போல்,உடனடியாக ஆன்மிக முன்னேற்றம் எற்பட உதவக் கூடிய குருவாகத்தேடிப் பிடித்து,அவரிடம் சரண் அடைகிறோம்.அவர் நமது உண்மையான ஆன்மிக முன்னேற்றத்துக்கு உதவக்கூடியவரா,சரியான பாதையில் நம்மை நடத்திச் செல்லகூடியவரா என ஆராயாமல் கவர்ச்சியில் மயங்கி விடுகிறோம்.அதன் பலன்---?
திருமூலர் சொல்கிறார் கேளுங்கள்.
“குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே”
எளிதாகப் புரிகிறதல்லவா?